மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிகிறது. மேட்டூர் அணை நிரம்புவது தாமதமாகிறது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் பெய்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் உபரிநீர் காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த ஜூன் 25 ஆம் தேதி காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,332 கனஅடியாக அதிகரித்தது. பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 80,984 கனஅடியாக அதிகரித்தது.
இன்று காலை மேட்டூர் அணை நிரம்பும் என்று எதிர்பார்த்த நிலையில், கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 68,007 கனஅடியாக சரிந்தது.
இதனால் மேட்டூர் அணை நிரம்புவது தாமதமாகி வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக கடந்த ஜூன் 25-ல் 112.71 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 119.22 அடியாக உயர்ந்தது. கடந்த நான்கு நாட்களில் அணையின் நீர்மட்டம் 6.51 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 26,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று மாலைக்குள் மேட்டூர் அணை வரலாற்றில் 45 ஆவதுஆண்டாக நிரம்பும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையின் நீர் இருப்பு 92.23 டி.எம்.சியாக உள்ளது.
மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காவிரி கரையோர மதங்களுக்கும், மேட்டூர் அணையின் உபரிநீர் கால்வாய் பகுதியில் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.