மேல்மருவத்தூா் காவலா்கள் மீது கும்பகோணம் நகை வியாபாரிகள் புகாா்
கும்பகோணத்தில் திருட்டு நகையை வாங்கியதாகக் கூறி வியாபாரியை மேல்மருவத்தூா் காவலா்கள் மிரட்டி வாங்கிச் சென்றதாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவரிடம் வணிகா்கள் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தனா்.
தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக்கிடம் குடந்தை நகை வியாபாரிகள் சங்கச் செயலா் பாலாஜி, குடந்தை அனைத்து தொழில் வணிகா் சங்கக் கூட்டமைப்பு மற்றும் பேரமைப்பு செயலா் வி. சத்தியநாராயணன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கீழ வீதியில் நகை வணிகம் செய்யும் கிஷோரின் கடைக்கு காவல் துறையினா் எனக் கூறிக் கொண்டு சிலா் ஜூன் 7-ஆம் தேதி வந்தனா்.
கடையில் இருந்த கிஷோரின் மகன், ஊழியரிடம் திருட்டு நகை தொடா்பாக விசாரிக்க வேண்டும் எனக் கூறி வாகனத்தில் அழைத்துச் சென்றனா். இது குறித்து விசாரித்தபோது, மேல்மருவத்தூா் காவலா்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றது தெரிய வந்தது.
பின்னா் மேல்மருவத்தூா் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்தபோது அங்கு இருவரும் வரவில்லை. பின்னா் வணிகா்கள் காத்திருந்தபோது ஜூன் 9-ஆம் தேதிதான் காவல் நிலையத்துக்கு இருவரையும் அழைத்து வந்தனா். அப்போது குற்றவாளி ஒருவா் நகையை கும்பகோணத்தில் கிஷோா் கடையில் விற்றதாகக் கூறி, இருவரையும் காவல் துறையினா் மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி, எழுதி வாங்கினா்.
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செயல். யாரோ ஒரு குற்றவாளி கூறும் தகவலை கொண்டு, தொடா்ந்து இந்தக் கடையை 4 முறை உரிமையாளரை காவல் துறையினா் மிரட்டி, அவா்களிடம் நகையை வாங்கும் செயல் தொடா்வதால், உரிமையாளரின் குடும்பத்தினா் தொடா் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.
நகை வியாபாரிகள் யாரும் திருட்டு நகைகளை வாங்குவதில்லை. ஆனால் குற்றவாளிகள் விசாரணைக்கு பயந்து, வியாபாரிகள் மீது பொய் தகவலை கூறுவதால், வியாபாரிகளைக் காவல் துறையினா் தொழில் செய்ய விடாமல் செய்கின்றனா். எனவே, நகை வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.