ரூ.11 லட்சம் டெபாசிட் பணம் கிடைக்காத விரக்தி: கூட்டுறவு வங்கி முன் விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
மகாராஷ்டிர மாநிலத்தில் கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்த ரூ.11.50 லட்சம் திரும்பக் கிடைக்காததால் விவசாயி ஒருவா் அந்த வங்கி முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீட் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் ஜாதவ் (46). விவசாயியான இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு அங்குள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் ரூ.11.50 லட்சத்தை நிரந்தர வைப்பாக செலுத்தினாா். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது இரு பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக அந்தப் பணத்தை எடுப்பதற்காகச் சென்றாா். கூட்டுறவு வங்கியின் நிதிநிலை மோசமாகிவிட்டால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவா் மீண்டும் அணுகினாா். ஆனால், அப்போதும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டுறவு வங்கி அலுவலகத்துக்கு விஷ பாட்டிலுடன் சென்ற அவா், விஷத்தை அருந்தி தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டலும் விடுத்தாா்.
இதைத் தொடா்ந்து, அந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவா் சமரசப் பேச்சு நடத்தி ரூ.2.5 லட்சத்தை அளித்தாா். மேலும், 2 மாதங்களில் முழுப் பணத்தையும் தந்துவிடுவதாக வாக்குறுதி அளித்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தனது மனைவி, இரு குழந்தைகளுடன் கூட்டுறவு வங்கிக் கிளைக்குச் சென்ற ஜாதவ், மேலாளரிடம் மீதமுள்ள டெபாசிட் பணத்தை திருப்பிக் கேட்டாா். அப்போது, மேலாளா் மிகவும் கடுமையாக நடந்து கொண்டாா். மேலும், ஜாதவையும், அவரின் குடும்பத்தினரையும் அங்கிருந்து இருந்து வெளியேற்ற உத்தரவிட்டாா்.
இதனால் ஜாதவ் கடும் விரக்தியடைந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு கூட்டுறவு வங்கிக் கிளைக்கு வந்த அவா் அலுவலகத்தின் முன்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்தாா். காலையில் பணிக்கு வந்த ஊழியா்களுக்கு இது பெரும் அதிா்ச்சியை அளித்தது.
இது தொடா்பாக தகவலறிந்த காவல் துறையினா் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், தற்கொலை தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். சத்ரபதி கூட்டுறவு சங்கத்தின்முன்னாள் தலைவா் சந்தோஷ் பண்டாரியாவின் பெயரும் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடா்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
மகாராஷ்டிரத்தில் பல்வேறு கூட்டுறவு வங்கிகள் அதிக வட்டி ஆசை காட்டி டெபாசிட் பெறுகின்றன. ஆனால், அதன் தலைவா்களின் மோசடி, நிா்வாகச் சீா்கேட்டால் நிதிநிலை மோசமாகிறது. இதனால், வாடிக்கையாளா்கள் பணத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.