``கோயில், குளம் என சுற்றுகிறாள், சரியாக கவனிக்கவில்லை ஆத்திரத்தில்..'' - மகளை கொன்ற 78 வயது தந்தை
நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் கட்டட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவரது பராமரிப்பில் அவரது தந்தை வேலு இருந்து வந்துள்ளார்.
வயது முதுமை காரணமாக வேலைக்குச் செல்லவில்லை. அவரது மகள் ஜெயலெட்சுமி, தந்தை வேலுவை சரியாக கவனிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தந்தைக்கும், மகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், ஜெயலெட்சுமி நேற்று உடலில் ரத்தக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு வந்த காளிமுத்து, மனைவி இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதே நேரத்தில் வீட்டில் இருந்த ஜெயலெட்சுமியின் தந்தை வேலுவை காணவில்லை. மேலப்பாளையம் காவல் நிலைய போலீஸார் அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரித்தனர்.
எப்போதும் வீட்டிலேயே இருக்கும் ஜெயலட்சுமியின் தந்தை வேலு மாயமாகி இருந்ததால், அவர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அவரைத் தேடினர்.
அவரை இரவில் பிடித்து விசாரித்ததில் மகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். போலீஸாரின் விசாரணையில், ”எனக்கு 78 வயதாகிறது. சமீபத்தில்தான் கண் புரை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. என் மகள் என்னை சரிவர கவனிக்கவில்லை. கோயில், குளம் என சுற்றுவதிலேயே அவள் நேரத்தை செலவிட்டாள். எனக்கு சரியான நேரத்தில் சாப்பாடு தரவில்லை. இதனால் எனக்கும் என் மகளுக்கும் அடிக்கடி சண்டை வரும்.

நேற்று மாலையிலும் இது தொடர்பாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் என்னை அடிப்பதற்காக கை ஓங்கினார். ஆத்திரமடைந்த நான் இரும்புக் கம்பியால் மகளின் தலையில் ஓங்கி அடித்தேன். கீழே விழுந்தவள் மயக்கத்தில் இருக்கிறாள் என நினைத்தேன். ஆனால், அவள் இறந்துவிட்டது பிறகுதான் தெரிந்தது. தவறு செய்துவிட்டோம் என வருந்தி காவல் நிலையத்தில் சரண் அடைய நடந்தேன். அதிக தூரம் நடக்க முடியாததால் மரத்தடியில் படுத்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.