திருப்பூர்: போலி ஆதார் அட்டையுடன் தங்கியிருந்த 26 வங்கதேசத்தினர் கைது; பின்னணி என்ன?
உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாகப் பின்னலாடை வர்த்தகத்தில் வங்கதேசம் உள்ளது. அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் துறையாக பின்னலாடைத் துறை விளங்கி வருகிறது.
இருந்தாலும், போதிய ஊதியம் கிடைக்காததால், திருப்பூரை நோக்கி சட்டவிரோதமாகப் படையெடுக்கும் வங்கதேசத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கியூ பிரிவு மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்புத் தனிப்படை போலீஸார் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே உள்ள தனியார்ப் பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தவர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து பணியாற்றுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த தனியார் நிறுவனத்தில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றியும், போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி, 26 வங்கதேசத்தினர் அங்குப் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அவர்களைக் கைது செய்த போலீஸார், பல்லடம் காவல் நிலையம் அழைத்து வந்த விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மேற்குவங்க மாநிலத்தில் ஏஜென்டுகள் மூலம் போலி ஆதார் அட்டைகளைப் பெற்று திருப்பூரில் தங்கியிருந்து வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சில வங்கதேசத்தவர்கள் போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்தி திருப்பூரில் தங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்ததால், அதுதொடர்பாக தீவிர சோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.