ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!
Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
இன்று பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்னை மனப்பதற்றம். 'ஒரே ஆங்சைட்டியா இருக்கு' என்று பயத்துடன் சொல்கிறார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தி அதைச் சரிசெய்ய முயற்சிப்பார்கள்; சிலர் அதற்கான நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவார்கள்; மீதமுள்ளவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். இது சரியா; மனப்பதற்றம் ஏன் ஏற்படுகிறது; அறிகுறிகள்; அதனால் வரக்கூடிய பிரச்னைகள் என்னென்ன; தீர்வுகள் இருக்கின்றனவா என்பனப்பற்றி சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் டாக்டர் லட்சுமிபாய் நம்மிடம் விளக்குகிறார்.

மனப்பதற்றம் அல்லது ஆங்சைட்டி ஏற்படுவதற்கு, மரபணுவும் ஒரு காரணம். சம்பந்தப்பட்டவரின் சூழ்நிலை இன்னொரு காரணம். சிலர், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை தன்னுடன் பொருத்திக்கொண்டு, 'அவங்களுக்கு நடந்த மாதிரி எனக்கும் ஃபிளைட் ஆக்ஸிடெண்ட் நடந்திடுமோ' என்றெல்லாம் மனப்பதற்றம் அடைவார்கள். இப்படி மூளையில் ஆங்சைட்டி ஏற்படும் பகுதிக்கு யாரெல்லாம் அதிகமாக வேலை கொடுக்கிறார்களோ, அவர்கள் பல நோய்களுக்கு வெல்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் வரவேற்கிறார்கள் என்று அர்த்தம். என் மருத்துவமனைக்கு வரும் பெண்களில் பலரும், சமீபத்தில் யாருக்கோ நடந்த பாலியல் குற்றங்கள், கொலைகள் போன்றவை தங்களுக்கும் நிகழ்ந்துவிடுமோ என்ற மனப்பதற்றத்துடன் வருகிறார்கள்.
மனப்பதற்றம் இருப்பவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம், நடுக்கம், கை-கால் உதறல், வேகமான இதயத்துடிப்பு, அதிகமாக வியர்வை போன்றவை ஏற்படும். சிலருக்கு இதயம் இருக்கும் இடத்தில் லேசான வலி போன்றதொரு உணர்வும் ஏற்படும். வயிறு உப்புசம், எதுக்களித்தல், வயிற்றில் ஒருவித அசௌகரியம், எப்போதும் சிறுநீர் அல்லது மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவையும் மனப்பதற்றத்தின் அறிகுறிகள்தான்.

வேகமாக இதயத்துடிப்பு மற்றும் இதயத்தில் வலிப்பதுபோல உணர்பவர்கள், 'ஹார்ட் பிராப்ளமாக இருக்குமோ' என பயந்துகொண்டு ECG, Echo, Treadmill போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். மனப்பதற்றம் மட்டுமே இருப்பவர்களுக்கு எல்லா ரிப்போர்ட்களும் இயல்பாகவே இருக்கும்.
மனப்பதற்றம் இருப்பவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் இருப்பார்கள். குடும்பத்துடன் நேரம் செலவிட மாட்டார்கள். எப்போதும், எந்த வேலையைச் செய்தாலும், அவர்களது மனதில் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) ஓடிக்கொண்டே இருக்கும். விளைவு, மனதில் பிரச்னை; குடும்பத்தில் பிரச்னை; அலுவலகத்தில் பிரச்னை என தவித்துப்போவார்கள்.

மனப்பதற்றத்தைப் பொருட்படுத்தாமல, அதற்கு சிகிச்சை எடுக்காமல் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை (Quality of Life) தவற விடுகிறார்கள் என்றே சொல்வேன். இந்தப் பிரச்னையை, பாதிக்கப்பட்டவர்களால் தனியாக சமாளிக்க முடியாது. அது அவசியமும் இல்லை. ஏனென்றால், இன்றைக்கு மனப்பதற்றத்துக்கு உளவியல்ரீதியாக நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன. அதைப் பெற்று, மனப்பதற்றம் நீங்கி நிம்மதியாக வாழுங்கள்'' என்கிறார் டாக்டர் லட்சுமிபாய்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR