மருத்துவமனையில் பாமக MLAகள்: "உடல்ரீதியாக, மனரீதியாகக் குணமடையக் கூட்டுப் பிரார்த்தனை" - அன்புமணி
பா.ம.க உட்கட்சி விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனால் தனித்தனியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம், நீக்கம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டங்களாகச் சென்று நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக சேலம் ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு வந்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், "பா.ம.க சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி ஆகிய இருவரும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் விரைவில் பூரணமாகக் குணமடைய வேண்டும் உடல்ரீதியாக, மனரீதியாகக் குணமடைய வேண்டும் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்" என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அன்புமணியை வரவேற்பதற்காக பேனர்கள் சேலம் மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டது. அதில் பெரும்பாலான பேனர்களில் சேலம் மேற்கு தொகுதியின் பா.ம.க எம்.எல்.ஏ அருள் ராமதாஸ் புகைப்படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக, உட்கட்சி விவகாரத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளராக எம்.எல்.ஏ அருள் இருந்து வருகிறார். ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடப்பதற்கு ஒரு நாள் முன்பு நெஞ்சுவலி காரணமாக பா.ம.க சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ அருள், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேலம் பொதுக்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பா.ம.க கௌரவத் தலைவரும், பெண்ணாகரம் எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது சேலம் மற்றும் தர்மபுரி மாவட்ட பா.ம.க-வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.