சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்
புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான சோனியா காந்தி(78) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) இரவு 9 மணிக்கு வயிற்று தொற்று தொடர்பான பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையின் இரைப்பை குடல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் அஜய் ஸ்வரூப் கூறுகையில், "சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது. அவா் வேகமாக குணமடைந்து வருகிறாா். மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், அவரது உணவுமுறையை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் மருத்துவர்கள், தொடர் பராமரிப்பின் ஒரு பகுதியாக இன்று ஒரு உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார்."
சோனியா மருத்துவமனையில் இருந்து எப்போது வீட்டிற்கு போகலாம் என்பதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை, அவர் குணமடைவதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.