ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா மு...
Thug Life : `இந்த நிலைமை இப்படியே நீடித்தால்..!’ - கர்நாடக அரசுக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்
கன்னட மொழி பற்றி நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக அவர் நடித்த தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.
அப்போது மனுதாரர் ஆன பட தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``கர்நாடக அரசு தரப்பு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் திரைப்படத்தை வெளியிட்டால் பாதுகாப்பு வழங்கப்படும் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள். படம் வெளியாவதற்கு துணை நிற்போம் என்றும் உறுதியளித்திருக்கிறார்கள். எனவே அது திருப்திகரமாக இருக்கிறது” என தெரிவித்தார்.

முட்டுக்கட்டை போடுவது..!
அப்போது பேசிய நீதிபதிகள், ``அப்படி என்றால் இந்த வழக்கை முடித்து வைத்து விடலாமா?” என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``இது இந்த ஒரு விவகாரம் சார்ந்தது மட்டும் கிடையாது. இதுபோன்று தொடர்ச்சியாக திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் இப்படியான முட்டுக்கட்டை போடுவது என்பது நடந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் இதுபோன்று அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்?
மேலும், ``படம் தாமதமாக வெளியாகும் போது அதனால் பெரும் நஷ்டம் என்பது ஏற்படுகிறது. அதை சமாளிக்கும் வகையில் உரிய இழப்பீடுகளை வழங்குவதற்கான நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும்” என்று கோரிக்கை முன்வைத்தார்
கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களில், ``இந்த விவகாரத்தில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு தான் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என கூறி இருந்தார்கள். அவரகள் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்யும் பட்சத்தில் நாங்கள் பாதுகாப்பு வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம்” என தெரிவித்தார்கள்.

அப்போது பேசிய நீதிபதிகள், ``தடையில்லா சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படம் வெளியிடுவதாக இருந்தால் அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஒரு மாநிலத்தின் கடமையாகும்.
இதுபோன்று திரையரங்குகளை தீக்கிரையாக்குவோம், படத்தை வெளியிட மாட்டோம் என்று சில வன்முறையாளர்கள் கூறினால் அந்த மிரட்டலை அடக்க வேண்டியது மாநிலத்தின் கடமை” என்று கூறினார்கள். ``அப்படியான அச்சுறுத்தல்களை யாரேனும் கொடுத்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என கர்நாடக அரசு தரப்பில் உடனடியாக பதில் கொடுக்கப்பட்டது.
அப்போது மீண்டும் பேசிய நீதிபதிகள், ``ஒரு நடிகர் நகைச்சுவையாக ஏதாவது ஒன்றை கூறினால் கூட, உணர்வுகள் புண்படுகின்றது என சொல்லி நாச வேலைகளில் சிலர் ஈடுபடுகின்றார்கள். எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்ற ஆழமான கேள்வியை தான் இதை எழுப்புகிறது
வன்முறை போராட்டங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?!
ஒரு கவிதைக்கு எதிராகவோ நாடகத்திற்கு எதிராகவோ கூட இது வரும் காலத்தில் தொடரும் அபாயம் இருக்கிறது இதையெல்லாம் அனுமதிக்க முடியாது” என நீதிபதிகள் கூறினார்கள்.
மேலும், ``ஒருவர் ஏதேனும் ஒரு தவறான கருத்தை கூறினால் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரலாம் அல்லது பதில் அறிக்கை விடலாம். அதை விட்டுவிட்டு வன்முறையை கையில் எடுக்கக் கூடாது” என நீதிபதிகள் தெரிவித்தனர்
அப்போது எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``ஏற்கனவே கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இடையே காவிரி நதி நீர் போன்ற விவகாரங்களில் பிரச்னை இருந்து வருகிறது. அதுபோன்ற சூழலில் நடிகர் கமல்ஹாசன் பேசியது சரியானது அல்ல. எனவே நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டும்தான் திரைப்படத்தை அனுமதிக்க வேண்டும்” என கூறினார்

அப்போது கோபமடைந்த நீதிபதிகள், ``அப்படி என்றால் நடைபெறும் வன்முறை போராட்டங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?” என நீதிபதிகள் கேட்டதோடு, `இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்வி எழவே இல்லை. தேவைப்பட்டால் அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரலாம். திரைப்படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு இப்படியான கருத்துக்களை பேசுவது என்பது ஒரு வகையான மார்க்கெட்டிங். அதை சிலர் செய்யும் போது அதில் நீங்கள் எல்லாம் மாட்டிக் கொள்கிறீர்கள்” என தெரிவித்தனர்
பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் ``தக் லைப் திரைப்படம் வெளியிடுவதற்கு கர்நாடக அரசு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
திரைப்படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும். வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.