வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு
RCB Event Stampede: கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் எழுப்பிய 9 கேள்விகள்; அரசின் பதில் என்ன?
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஆர்.சி.பி அணி கோப்பை வென்றதையடுத்து (ஜூன் 3), அவசர அவசரமாக அடுத்த நாளே பெங்களுருவில் சட்டமன்ற வளாகத்திலும், சின்னசாமி ஸ்டேடியத்திலும் ஆர்.சி.பி வீரர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, ஜூன் 4-ம் தேதி பெங்களுருவில் ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

இதில், உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் சித்தராமையா, ஆர்.சி.பி நிர்வாகம், மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்ட அதேவேளையில், மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது.
ஜூன் 5-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், "இதுபோன்ற கூட்ட நெரிசல் சம்பவங்களின்போது, அருகில் ஆம்புலன்ஸுகள் இருப்பதை உறுதி செய்தல், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக தகவல் அளிப்பது உள்ளிட்ட ஒரு நிலையான செயல்பாட்டு நெறிமுறையை (SOP) அரசு வைத்திருப்பது அவசியம்" என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.
மீண்டும் விசாரணை
மேலும் நீதிபதிகள், இந்த வழக்கைத் தாமாக முன்வந்து பதிவுசெய்ய நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, ஜூன் 10-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
அதன்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வி. காமேஸ்வர் ராவ், சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று (ஜூன் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநில அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரலிடம் நீதிபதிகள் ஒன்பது கேள்விகள் எழுப்பினர்.
(1) வெற்றிக் கொண்டாட்டத்தை என்ன முறையில் எப்போது, யார் நடத்த முடிவெடுத்தது?
(2) போக்குவரத்தை ஒழுங்குபடுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
(3) கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?
(4) நிகழ்ச்சி இடத்தில் என்னென்ன மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன?
(5) கொண்டாட்டத்தின்போது எத்தனை பேர் கூடுவார்கள் என்று முன்கூட்டியே ஏதேனும் மதிப்பீடு செய்யப்பட்டதா?
(6) காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டதா? இல்லையென்றால், ஏன் அளிக்கப்படவில்லை?

(7) காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எவ்வளவு நேரம் ஆனது?
(8) விளையாட்டு நிகழ்ச்சி அல்லது கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் 50,000-க்கும் மேற்பட்டோர் கூடும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த நிலையான செயல்பாட்டு நெறிமுறை (SOP) உருவாக்கப்பட்டிருக்கிறதா?
(9) நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு ஏதேனும் அனுமதி வாங்கப்பட்டதா?
நீதிபதிகளின் இத்தகைய கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு அடுத்த விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.