Tasmac : `ஆகாஷ் பாஸ்கரன் அப்போ பள்ளி சென்று கொண்டிருந்தார்’ ; உயர் நீதிமன்றம் ED-க்கு போட்ட உத்தரவு!
ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு வழக்கு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில், அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், சீல் அகற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், எதனடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்ற காரணத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தார்.
அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், இதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை எனக்கூறி ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
வீடு சீல் வைக்கப்படவில்லை!
இதனையடுத்து, வீட்டை சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத பொழுது, எப்படி சீல் வைக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், ``வீடு சீல் வைக்கப்படவில்லை” என்றும் தங்களை தொடர்பு கொள்ளாமல் கதவை திறக்க வேண்டாமென்று நோட்டீஸ் மட்டும் தான் ஒட்டப்பட்டதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ``அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், `தன்னுடைய வீட்டுக்குள் செல்ல அவர் அமலாக்கத்துறையிடம் அனுமதி பெற வேண்டுமா?’ என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், அந்த நோட்டீஸை அகற்றிவிடுவதாக கூறினார்.

ஆகாஷ் பாஸ்கரன் பள்ளி சென்று கொண்டிருந்தார்!
நோட்டீஸ் ஒட்ட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக செய்யப்பட்ட ஒன்றை சட்டப்பூர்வமானதாக மாற்ற வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ``2014 முதல் 2021-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறி பார் உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலத்தில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளி சென்று கொண்டிருந்தார்” தெரிவித்தார்.
இதனையடுத்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.