`ரைஸ் குக்கர்' கண்டுபிடித்தது யார் தெரியுமா? சமையலில் புரட்சியை ஏற்படுத்திய குடு...
ThugLife: `சட்டத்துக்கு மாறான விஷயங்களை..!’ - கர்நாடகா அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படத்துக்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வான நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
எடுத்தவுடன் பேசிய நீதிபதிகள், `குண்டர்கள் கலவரம் செய்பவர்கள், நமது வீதிகளை வன்முறையை கையில் எடுத்துக் கொண்டு கைப்பற்றுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எந்த சமூகமும் சட்டத்தின்படி தான் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு ஏதாவது தெரிவிக்க வேண்டும் என்றால் நாளைக்குள் தெரிவித்து விடுங்கள். இது போன்ற விஷயங்களை எல்லாம் அப்படியே தொடர விட முடியாது" என கடுமையாக பேசினர்.

வன்முறையை காரணம் காட்டி தடை விதிக்க முடியாது!
அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `இந்த விவகாரத்தில் ஏற்கனவே கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.' என கூறினார். அப்போது மீண்டும் கோபமாக பேசிய நீதிபதிகள், ``அதற்காக சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. திரைப்படத்தை எடுக்கவும் அதை வெளியிடவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அந்தத் திரைப்படத்தை பார்ப்பதா வேண்டாமா என்பது மக்களின் முடிவு சார்ந்தது.
அதை விடுத்து வன்முறையை காரணம் காட்டி யார் ஒருவரும் ஒரு திரைப்படத்தை தடை விதிக்க முடியாது.
சட்டத்திற்கு மாறான விஷயங்களை அனுமதிக்க வேண்டும் என சொல்கிறீர்களா?
திரையரங்குகள் எரிக்கப்படும் என்ற பயத்தில் திரைப்படத்தை வெளியிட தடை விதிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி யாராவது மிரட்டல் விடுகிறார்கள் என்றால் திரைப்படத்தை பாதுகாப்பாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது மாநில அரசின் கடமை. இது தொடர்பாக கர்நாடக அரசு முடிவு எடுத்திருக்க வேண்டும்” என அடுத்தடுத்து காட்டமாக கூறினார்கள்
அப்போது மீண்டும் பேசிய கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர், ``இந்த விவகாரத்தில் பிரச்னை முடியும் வரை திரைப்படத்தை வெளியிடப் போவதில்லை” என படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்து இருக்கிறார் என தகவல் கூறினார்

அதைக் கேட்டு மீண்டும் கடுப்பான நீதிபதிகள், ``அதனால் என்ன ? அதற்காக சட்டத்திற்கு மாறான விஷயங்களை அனுமதிக்க வேண்டும் என சொல்கிறீர்களா?
உரிய சென்சார் சான்றிதழ் பெற்ற பின்னர் எந்த ஒரு திரைப்படத்தையும் தடை செய்ய முடியாது, அரசு அதனை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறினார்கள்
``சட்டத்தின் படி அனைத்து நடைபெற வேண்டுமே தவிர சிலரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றார் போல் நடைபெறக்கூடாது. எனவே இந்த திரைப்படத்தை திரையிடும் விவகாரம், பாதுகாப்பு விவகாரம் தெரடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்” என தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக கர்நாடக உயர் நீதி மன்றத்தில் இருக்கும் வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர்.
கடைசியாக பேசிய நீதிபதிகள், ``இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட அந்த நபர் பேசிய விவகாரம் குறித்து விவாதம் நடத்தட்டும். அறிவார்ந்த பெங்களூரு மக்கள் அவர் சொன்னது எந்த அளவிற்கு தவறானது... எந்த அளவிற்கு முட்டாள்தனமானது என்பதை நிரூபிக்கட்டும்” என கமல்ஹாசனின் பெயரை குறிப்பிடாமல் சொன்னார்கள்.