இன்னுமா? கேதார்நாத் மேகவெடிப்பு.. 12 ஆண்டுகளாக அடையாளம் காணப்படாமல் 700 உடல்கள்!
டெஹ்ராடூன்: கேதார்நாத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நேரிட்ட மேகவெடிப்பின்போது சுமார் 4 ஆயிரம் பேர் பலியான சம்பவத்தில் 700க்கும் மேற்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
12 ஆண்டுகள் கடந்துவிட்டன. உறவினர்களின் டிஎன்ஏக்கள் ஒத்துப்போகாமல், உடல்களை ஒப்படைக்கும் பணி நிறைவடையாமலேயே உள்ளது.
அரசு அளிக்கும் தரவுகளின்படி, 735 உடல்கள் கேதார்நாத் மேகவெடிப்பின்போது கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் என்ற நிலையில் சுமார் 6 ஆயிரம் பேர் தங்களது உறவினர்களின் உடல்களைக் கண்டறிய டிஎன்ஏ மாதிரிகளை சோதனைக்குக் கொடுத்தனர். ஆனால், மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இன்றைய நாள் வரை, 33 டிஎன்ஏக்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனால், என்னவானது தெரியுமா? நூற்றுக்கணக்கான உடல்கள் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்படாமலேயே உள்ளது.
2013ஆம் ஆண்டு இதே ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்தியாவின் மிக மோசமான இயற்கைப் பேரழிவுச் சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு முந்தைய பேரழிவாக 2004 சுனாமி அமைந்துள்ளது.
கேதார்நாத்தில் இருந்த ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இந்த எண்ணிக்கை 4 ஆயிரம் அல்ல... 6 ஆயிரம் என்கின்றன பல்வேறு தகவல்கள். லட்சக்கணக்கானோர் சிக்கியிருந்த நிலையில் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.
அந்த நேரத்தில் உடல்கள் மட்டுமல்ல, கைவிரல்கள், பற்கள் கூட கண்டெடுக்கப்பட்டு ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் இருந்த ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதனுடன் 735 உடல்களின் டிஎன்ஏக்களின் மாதிரிகளும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
கேதார்நாத்தில் இருந்த, தரிசனத்துக்குச் சென்றவர்கள் என பலரது உறவினர்களும், டிஎன்ஏ சோதனைக்கு மாதிரிகளை வழங்கியபோதும், அதில் வெறும் 33 உடல்கள் மட்டுமே டிஎன்ஏ மூலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் 702 உடல்கள் ஒப்படைக்கப்படாமல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.