இஸ்ரேலுக்கு சீனா, ரஷியா கண்டனம்! இரு நாட்டு அதிபர்கள் விவாதம்!
போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தல்
இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா வலியுறுத்தியுள்ளது.
அணுசக்தி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்துவதாகக் கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈரான் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரான் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன. ஈரானின் முப்படை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனா்.
அதற்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் போரை நிறுத்த வேண்டும் என ஈரான் - இஸ்ரேல் ஆதரவு நாடுகள் கூறி வருகின்றன.
ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், 'இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலையிட்டால், சரி செய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்படும்' என ஈரான் நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் ஈரானுக்கு ஆதரவாக சீனா, இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், "மத்திய கிழக்கில் மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் குறிப்பாக இஸ்ரேல், மக்களின் நலன் கருதி உடனடியாக போரை நிறுத்த வேண்டும்.
இந்த போரில் அமெரிக்கா தலையிடுவதையும் அமெரிக்க படைகள் புகுவதையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது.
மற்ற நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் எந்தவொரு செயலையும் சீனா எதிர்க்கிறது" என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு