மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஹிந்து அமைப்பு மனு!
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளத்தைச் சேர்ந்த ஹிந்து அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், வக்ஃப் திருத்தச் சட்டம் இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்த நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு புதிய வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை கடந்த 17-ஆம் தேதி பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஐந்து மனுக்களை மட்டும் விசாரிக்கத் தீா்மானித்து, இந்த வழக்குக்கு ‘மறுஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’ என்று தலைப்பிட்டது.
இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு தற்போது விசாரித்து வருகின்றது.
இந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீ நாராயண தர்மம் மானவ அறக்கட்டளை சார்பில், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
”அனைத்து தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் நல்வாழ்வு ஒருவரையொருவர் சார்ந்து இருக்க வேண்டும் என்ற ஸ்ரீ நாராயண குருவின் போதனையைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக இந்திய முஸ்லிம் சமூகத்தின் மீதும், நமது நாட்டின் சமூக நீதியின் மீதும் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தின் பேரழிவு தாக்கத்தை வெறும் பார்வையாளராக 'ஸ்ரீ நாராயண தர்மம் மானவ அறக்கட்டளையால் இருக்க முடியாது.
இந்தச் சட்டம் மிகவும் தவறானது, ஏனெனில் நாடாளுமன்றத்திற்கு எந்தவொரு பிரிவு மக்கள் மீதும் திணிக்க அதிகாரம் இல்லை, எனவே இது அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும். பிரிவுகள் 21, 25, 26 மற்றும் 29(1) இன் கீழ் முஸ்லிம் சமூகத்தின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது.
இந்தியாவில் இஸ்லாமிய நடைமுறை மற்றும் உயிர்வாழ்விற்கு அவசியமான பொருளாதார மற்றும் நிதி வளங்களின் மிக முக்கியமான ஆதாரமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வக்ஃப் வாரியத்தைச் சார்ந்து இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் இருப்பையே இந்தச் சட்டம் அச்சுறுத்துகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.