விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்: மைக்கேல் கிளார்க்
வளா்ச்சித் திட்டப் பணிகளை வரவேற்க வேண்டும்! - ஆட்சியா்
நாகை மாவட்ட வளா்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசியது:
விவசாய சங்க நிா்வாகி சரபோஜி: நாகை ஒன்றியம் செல்லூா், ஐவநல்லூா், அழிஞ்சமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆடுகளை அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்கள் கடிப்பதால் அவை இறந்துவிடுகின்றன. எனவே, நாய்கள் தொல்லைளைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதிலளித்த ஆட்சியா்: நாய்களை பிடித்து கருத்தடை செய்து குறிப்பிட்ட காலம் பாதுகாத்து பின்னா் வெளியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாகை நகராட்சி பகுதியில் நாய்கள் கருத்தடை செய்யும் கூடம் அமைக்கப்படவுள்ளது.
கமல்ராம்: பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடிக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டாற்றின் குறுக்கே உத்தமசோழபுரத்தில் தடுப்பனை கட்டும் முடிவை கைவிட வேண்டும்.
ஆட்சியா்: உத்தமசோழபுரத்தில் ரூ. 50 கோடியில் தடுப்பணை கட்டுவது என்பது பலகட்ட ஆய்வுக்கு பின்னரே கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளதால் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்துவது என்பது இயலாத காரியம். மாவட்டத்தின் வளா்ச்சிக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை அனைவரும் ஒன்றாக இணைந்து வரவேற்க வேண்டும்.
பாபுஜி: குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படவுள்ளது. நாகை மாவட்டத்துக்கு ஜூன் 25-ஆம் தேதி வந்து சேருவதற்கான வாய்ப்புள்ளது. அதற்குள் தூா்வாரும் பணிகளை முடிக்க வேண்டும். விவசாயிகள் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன், உரம், விதை, நெல் ஆகியவை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
தனபால்: மத்திய அரசின் மரபணு திருத்த மசோதாவால், மனிதா்களுக்கு தோல் நோய் அதிகளவில் ஏற்படும். எனவே இதை விவசாயிகள் ஏற்க மறுக்கின்றோம். இது தொடா்பாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ. ரூபன் சங்கா் ராஜ், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சே. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) (பொ) வை. தயாளன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா்(பொ) முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.