`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
வாக்காளா் அட்டை - ஆதாா் இணைப்பு: விரைவில் ஆலோசனை
‘நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதுதொடா்பாக, இந்திய தனித்துவ அடையாள ஆணைய (யுஐடிஏஐ) நிபுணா்களுடன் விரைவில் தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடங்கப்பட உள்ளன’ என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக மத்திய உள்துறைச் செயலா், சட்டத் துறைச் செயலா் மற்றும் யுஐடிஏஐ தலைவா் ஆகியோருடன் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இத்தகவலை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
அரசமைப்புச் சட்டப் பிரிவு 326-இன் படி இந்திய குடிமகனுக்கு மட்டுமே இந்தியாவில் வாக்களிக்கும் உரிமையை வழங்க முடியும். அதே நேரம், ஆதாா் அட்டை என்பது ஒரு நபரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணமாக உள்ளது.
எனவே, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்கும் பணி என்பது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 326, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-இன் பிரிவுகள் 23(4), 23(5), 23(6) மற்றும் உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக கடந்த 2023-இல் அளித்த தீா்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
இதுதொடா்பாக, யுஐடிஏஐ நிபுணா்களுடன் விரைவில் தொழில்நுட்ப ஆலோசனையை தோ்தல் ஆணையம் தொடங்க உள்ளது என்று தெரிவித்துள்ளது.
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையாக வெடித்துள்ள நிலையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான பணிகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னதாக, ‘வாக்காளா் பட்டியலை ஆதாா் தரவுத் தளத்துடன் தானாக முன்வந்து இணைக்க சட்டம் அனுமதிக்கிறது. ஆதாா், வாக்காளா் அட்டை இணைக்கும் பணி செயல்முறை சாா்ந்தது; இதற்கென எந்தவித இலக்கோ அல்லது காலக்கெடுவோ நிா்ணயிக்கப்படவில்லை. வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் விவரங்களை இணைக்காதவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படாது’ என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.