இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி ப...
விடுப்பு எடுப்பதில் தகராறு! சக பணியாளர்களை கத்திக்குத்திய அரசு ஊழியர்! (விடியோ)
மேற்கு வங்கத்தில் விடுப்பு தர மறுத்ததால் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் விடுப்பு தர மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அமித் குமார் சர்க்கார் என்ற அந்த ஊழியர் ரத்தக்கறைப் படிந்த கத்தியுடன் தெருவில் நடமாடும் விடியோக் காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அமித் குமார் கொல்கத்தாவின் நியூ டவுனில் உள்ள கரிகரி பவன் தொழில்நுட்பக் கல்வித்துறையில் பணியாற்றிவந்தார்.
#DINAMANI | விடுமுறை அளிக்காததால் வெறிச்செயல்! சக பணியாளர்களுக்கு கத்திக்குத்து!#westbengal#govtemployees#stabbed#leave#viralvideo#arrestedpic.twitter.com/dZhXj3o9uF
— தினமணி (@DinamaniDaily) February 7, 2025
இதுபற்றி காவல்துறையினர் கூறுகையில், “வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சோடேபூரில் உள்ள கோலாவைச் சேர்ந்த சர்க்கார், தொழில்நுட்பக் கல்வித் துறையில் பணிபுரிகிறார். இன்று காலை, விடுப்பு எடுப்பது தொடர்பாக தனது சக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றார்.
காயமடைந்த சக ஊழியர்களான ஜெய்தேப் சக்ரவர்த்தி, சாந்தனு சாஹா, சர்தா லேட் மற்றும் ஷேக் சதாபுல் ஆகியோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது” என்றனர்.
அவருக்கு ஏன் விடுமுறை மறுக்கப்பட்டது அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அமித் குமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாகவும், சக ஊழியர்களை கத்தியால் குத்தியவக்கு மன ரீதியிலான பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.