இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 15 | Today Rasi palan | Astrology | ...
விமானி சுமீத் சபர்வால் தந்தையிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்!
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த திருமணமாகாத விமானி சுமீத் சபர்வால், விபத்துக்கு முன்பு வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள 90 வயதான தனது தந்தையிடம் அடுத்த மாதம் முதல் வேலையைவிட்டு, முழு நேரமும் உங்களை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்திருந்த நிலையில் விமான விபத்தில் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சில நிமிஷங்களிலேயே அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.
நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 274-ஆக உயா்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியாகி வருகின்றன.
விமானத்தில் இரு விமானிகள் உள்பட 12 ஊழியா்கள் இருந்த நிலையில், இவா்களில் 9 போ் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது.
விமானி சுமீத் சபா்வால் (56), துணை விமானி கிளைவ் குந்தா் ஆகியோா் மும்பைவாசிகள். சுமீத் 8,200 மணிநேரமும், குந்தா் 1,100 மணிநேரமும் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவா்கள்.
இந்நிலையில், திருமணமாகாத விமானிகள் சுமீத் சபர்வால் தனது தந்தையிடம் கடைசியாக பேசியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடப்பதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு, வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள 90 வயதான தந்தையை கவனித்துக்கொள்வதாக பணியில் இருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தனது தந்தை புஷ்கராஜிடம் தான் அடுத்த மாதம் பணியை ராஜிநாமா செய்துவிட்டு வருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மூத்த விமானி சுமீத் சபர்வாலின் குடும்ப நண்பர் லாண்டே கூறியதாவது:
நல்ல நண்பரை இழந்து தவிக்கிறேன். அவர் உயிரிழந்ததை எங்களால் நம்பமுடியவில்லை. விமான விபத்து ஏற்படுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்புதான் சுமீத் அவரது தந்தை புஷ்கராஜிடம் பேசும்போது, விமானி பணியை ராஜிநாமா செய்விட்டு வீட்டிற்கு வந்து முழு நேரமும் உங்களை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்தார். ஆனால், அதற்குள் இந்த துயர சம்பவம் நடந்துவிட்டது.
மகனின் இறப்பால் அவரது தந்தையால் ஒரு வார்த்தைக் கூட பேச முடியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ள புஷ்கராஜியின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே பேச்சாக வருகின்றன என கூறினார்.
தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு பெயர் பெற்ற ஒரு அனுபவமிக்க 56 வயதான சுமீத் சபர்வால், 90 வயதான தனது தந்தை புஷ்கராஜியுடன் மும்பை பவாய் பகுதியில் வசித்து வந்தார். புஷ்கராஜ் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான ஊழியா்கள் மற்றும் பயணிகள் ஒவ்வொருவரின் பின்னணியிலும் உள்ள உருக்கமான கதைகள், சோகம் நிறைந்தவையாக உள்ளன.