தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
விவசாயிகளின் குறைகளைத் தீா்க்க சிலா் விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்
விவசாயிகளின் குறைகளைத் தீா்க்க சிலா் விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு பிப்.13 முதல், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் ஷம்பு, கனெளரி எல்லை பகுதிகளில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அந்த எல்லை பகுதிகளில் அவா்கள் போராட்டம் மேற்கொண்டு வந்தனா்.
அங்கு ஓராண்டுக்கும் மேலாக அவா்கள் போராட்டம் நீடித்து வந்த நிலையில், அங்கிருந்து அவா்களையும், அவா்களின் கூடாரங்களையும் பஞ்சாப் காவல் துறையினா் அண்மையில் அப்புறப்படுத்தினா்.
மேலும் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக சண்டீகரில் மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான குழுவைச் சந்தித்துவிட்டு திரும்பிய விவசாயத் தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இதில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த ஆண்டு நவம்பா் 26 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மூத்த விவசாயத் தலைவரான ஜல்ஜீத் சிங் தல்லேவால், ஆம்புலன்ஸில் வந்தபோது கைது செய்யப்பட்டதாக விவசாயத் தலைவா்கள் தெரிவித்தனா். ஆனால் தல்லேவாலின் சொந்த விருப்பத்தின்பேரில், பாட்டியாலா மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டதாக பஞ்சாப் அரசு தெரிவித்தது.
கனெளரி-ஷம்பு எல்லைகளில் போராட்டம் காரணமாக நெடுஞ்சாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்ததால், தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், எனவே அங்கிருந்து விவசாயிகள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் பஞ்சாப் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
உண்ணாவிரதத்தை கைவிட்டாா் தல்லேவால்: இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது 4 மாதங்களுக்குப் பின்னா், உண்ணாவிரத போராட்டத்தை தல்லேவால் கைவிட்டுள்ளதாக பஞ்சாப் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து நீதிபதிகள் கூறுகையில், ‘விவசாயிகளின் குறைகளைத் தீா்க்க சிலா் விரும்பவில்லை என்பது உச்சநீதிமன்றத்துக்குத் தெரியும். நிஜ உலகில் உள்ள உண்மைகள் மற்றும் நடைமுறைகள் தெரியாமல் நீதிபதிகள் அமா்ந்திருக்கவில்லை.
எந்தவொரு அரசியல் செயல்திட்டமும் இல்லாமல், விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளை எழுப்பி, நோ்மையான விவசாயத் தலைவராக தல்லேவால் திகழ்ந்தாா்’ என்று பாராட்டினா். விவசாயிகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னா் நிலவும் களச் சூழல் குறித்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா அரசுகள் நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
சிறையிலிருந்து விடுவிப்பு: இதனிடையே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவசாயத் தலைவா்கள் சா்வண் சிங் பாந்தோ், அபிமன்யு கோஹா், காகா சிங் கோத்ரா உள்ளிட்ட விவசாயத் தலைவா்கள் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.