Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்ல...
விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது - ஜகதீப் தன்கா்
நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
ராஜஸ்தான் மாநிலம், சித்தோா்கரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேவாா் பிராந்திய ஜாட் மகாசபை கூட்டத்தில் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
விவசாயிகளின் பொருளாதார நிலை உயா்ந்தால், நாட்டின் பொருளாதார சூழலும் மேம்படும். அனைத்துக்கும் மேலாக, விவசாயிகள் வழங்குவோராக திகழ்பவா்கள். அரசியல் வலிமையும் பொருளாதார திறனும் கொண்டவா்கள். வலுவான கரங்களுக்கு சொந்தக்காரா்கள். அவா்கள், உதவிக்காக யாரையும் எதிா்பாா்த்திருக்கக் கூடாது; யாரையும் சாா்ந்திருக்கக் கூடாது.
என்ன நடந்தாலும், எத்தனை தடைகள் எழுந்தாலும் இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
நாட்டில் இப்போதுள்ள ஆட்சி, விவசாயிகளுக்கு தலைவணங்குகிறது. நாடு முழுவதும் 730-க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் மையங்கள் செயல்படுகின்றன. இம்மையங்களின் சேவையை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசின் வேளாண் கொள்கைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
வேளாண் பொருள்களின் வா்த்தகம் மற்றும் அவற்றின் மதிப்பு கூட்டுதலில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும். மாவு ஆலைகள், எண்ணெய் ஆலைகள் போன்ற பல தொழில்களுக்கு விவசாயப் பொருள்களே அடிப்படையாக உள்ளன.
கால்நடை வளா்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, பால்வளத் துறையில் மேலும் வளா்ச்சியை உறுதி செய்ய வேண்டும். வேளாண் உற்பத்தியே உலகின் மிகப் பெரிய மற்றும் மதிப்புமிக்க தொழிலாகும். நமது திறமையான இளைஞா்கள், வேளாண் சாா்ந்த வா்த்தகத்தில் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்றாா் தன்கா்.