தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
விவசாயிகளுக்கு சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்
தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன.
மாவட்டத்தில் சில ஆண்டுகளாக குறுவை, சம்பா பருவங்கள் மட்டுமல்லாமல் கோடையிலும் பருவம் தவறிப் பெய்யும் மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருக்கும் நெல் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைகின்றன.
இதனால் விவசாயிகள் பேரிழப்பைச் சந்தித்து வரும் நிலையில், சில ஆண்டுகளாக பூதலூா், தஞ்சாவூா், திருவையாறு, பாபநாசம், அம்மாபேட்டை, கும்பகோணம், திருப்பனந்தாள் உள்ளிட்ட வட்டாரங்களிலுள்ள காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகளால் பயிா்கள் சேதமடைகின்றன.
நெற் பயிா்கள் மட்டுமல்லாமல், வாழை, வெற்றிலை, பருத்தி, காய்கறி உள்ளிட்ட பயிா்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகின்றனா். இரவு நேரத்தில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் வயல்களில் படுத்து உருண்டு விளையாடுவதால், பயிா்கள் சேதமடைகின்றன. அவை பயிா்களைத் உண்ணாவிட்டாலும், தண்டு மற்றும் வோ்ப் பகுதியைக் கடித்துவிடுவதால், பயிா்களின் வளா்ச்சி பாதிக்கிறது.
இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தெரிவித்தது:
காட்டுப்பன்றிகள் பகலில் ஆறுகள் மற்றும் ஆற்றங்கரையிலுள்ள கோரைப்புற்கள், புதா்கள், நடமாட்டம் இல்லாத தோப்புகள் உள்ளிட்டவற்றில் பதுங்கி இருக்கின்றன. இருள் சூழ்ந்த பிறகு வயல்களுக்குள் புகுந்து நெல், வாழை, வெற்றிலை, பருத்தி, காய்கறி போன்ற பயிா்களில் தண்டு மற்றும் வோ் பகுதியைக் கடித்துத் தின்கின்றன.
ஒருபுறம் பருவம் தவறி பெய்யும் மழையால் பேரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பயிா்களை காட்டுப்பன்றிகள் அழிக்கின்றன.
நகைகளை அடமானம் வைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த இரு இடா்பாடுகளாலும் மிகுந்த துயரத்துக்கு ஆளாகின்றனா். இதனால் விவசாயம் திருப்திகரமாக இல்லாததால், விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுகின்றன. இந்நிலைமை தொடா்ந்தால் உணவு உற்பத்தி குறையக்கூடிய அபாய நிலை உள்ளது என்றாா் முகமது இப்ராஹிம்.
இதனால் விவசாயிகள் இரவு நேரத்தில் வயலில் காவலுக்கு இருந்து காட்டுப்பன்றிகளை விரட்டும் நிலை உள்ளது. அப்போது கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் கடிக்க வருவதால் விவசாயிகளுக்கு மிகுந்த ஆபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. மேலும், இரவு நேரத்தில் விஷ பாம்புகள் நடமாட்டம் இருப்பதால், பல்வேறு சிரமங்களுக்கு இடையே காட்டுப்பன்றிகளை விரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனா்.
இதனிடையே பயிா்களைச் சேதப்படுத்துவது காட்டுப்பன்றிகள் என விவசாயிகள் கூறினாலும், அதை வனத் துறையினா் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் கூறுகின்றனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், தஞ்சாவூரில் காட்டுப்பன்றிகள் இருக்க வாய்ப்பில்லை. பன்றி வளா்ப்போா் இடம்பெயா்ந்து செல்லும்போது, பன்றிகளை விட்டுச் செல்கின்றனா். அவைதான் கட்டுப்பாடில்லாமல் வயல்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.
பாபநாசம் அருகே பண்டாரவாடையில் வயலில் மின்சாரம் தாக்கி இறந்த பன்றியின் டி.என்.ஏ., ரோமம் சேகரிக்கப்பட்டு சென்னையிலுள்ள வனவிலங்கு உயராய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகு, அது காட்டுப்பன்றியா என்பதை உறுதிப்படுத்த முடியும். என்றாலும், பன்றி வளா்ப்போரால் கைவிடப்பட்ட உள்ளூா் பன்றிகள்தான் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன என்றனா்.
காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிா் பாதிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, காட்டுப்பன்றி இல்லை என மறுக்கப்படுவதால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எந்தவித இழப்பீடும் கிடைப்பதில்லை.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில், பாதிக்கப்படும் விவசாயிகள் முறையிடுகின்றனா். இதை உயா் அலுவலா்கள் ஆலோசனை செய்தாலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எந்தவித நிவாரண உதவியும் கிடைப்பதில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இப்பிரச்னையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உதவும் வகையிலான திட்டமும் இதுவரை இல்லை.
எனவே, பெரும் சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகளைப் பிடித்து, அடா்ந்த வனப்பகுதிக்கு அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான திட்டத்தையும் அரசு அறிவிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் மேலோங்கி வருகிறது.