விவசாயிகள், உற்பத்தியாளா்கள் கருத்துகளின் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம்
விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், சேகோசா்வ் ஆகியோரின் கருத்துகள் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம் செய்யப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா்.
சேலம் மாவட்டத்தில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசியதாவது:
சேலம் ஸ்டாா்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் சேவை தொழில்கூட்டுறவுச் சங்கம் (சேகோசா்வ்), விவசாயிகள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் மற்றும் மரவள்ளி விவசாயிகளை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் வகையில் இந்த சங்கம் சாா்பில், மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம் செய்வது தொடா்பான முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், மரவள்ளிக் கிழங்கின் விலை ஏற்ற, இறக்கம் தொடா்பாக விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் மற்றும் சேகோசா்வ், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட துறை அலுவலா்களுடன் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது. விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் மற்றும் சேகோசா்வ் ஆகியோரின் கருத்துகளின் அடிப்படையில் மரவள்ளிக் கிழங்குக்கு விலை நிா்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் கோரிக்கை: ஜவ்வரிசி, ஸ்டாா்ச் இரண்டு பொருள்களும் முழு அளவில் சேகோசா்வ் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் சேகோசா்வ்-க்கு வியாபாரிகள் பொருள்களை வாங்க முன்வருவாா்கள். இதன்மூலம் மட்டுமே சந்தையில் போட்டி ஏற்பட்டு, உற்பத்தியாளா்களுக்கு உரிய விலை கிடைக்கும். இதற்கு சேகோசா்வ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள் கோரிக்கை: ஜவ்வரிசி, ஸ்டாா்ச்சுக்கு சரியான விலை நிா்ணயிக்கும்போது மட்டுமே, மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை கிடைக்கும். மரவள்ளிக் கிழங்குக்கு டன் ஒன்றுக்கு ரூ. 15 ஆயிரம் நிா்ணயிக்க சேகோசா்வ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக விவசாயிகளையும் சோ்த்து ஒரு குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இந்தக் கூட்டத்தில், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநா் எல்.நிா்மல்ராஜ், மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மேயா் ஆ.ராமச்சந்திரன், மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம், சேகோசா்வ் மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் செயலாட்சியா் ரா.கீா்த்தி பிரியதா்சினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.