10 ரன்கள் தேவை, 19-ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகள்: ஆட்டத்தை மாற்றிய சூர்யா!
`வெறுங்கையோடு திரும்பிய வாரிசு' டு `பற்றவைத்த வாழ்த்து; எடப்பாடிக்குப் போட்டியாக வேலுமணி?’ | கழுகார்
ஜில் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில், அண்மையில் பட்டமளிப்பு விழா நடந்தது. உள்ளுர் எம்.எல்.ஏ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன், ஆளுங்கட்சியின் மாவட்டப் புள்ளியும் விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். இதில் விவகாரம் என்னவென்றால், தனது வாரிசையும் உடன் அழைத்துச் சென்ற மாவட்டப் புள்ளி, வாரிசுக்கும் பட்டமளிப்பு அங்கியை அணியவைத்து, அவரது கையால் மாணவர்களுக்கு பட்டங்களைக் கொடுக்கச் செய்திருக்கிறாராம். அந்த வாரிசின் ஆபாச வீடியோ, உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களில் சுற்றிச் சுழன்று சர்ச்சையைக் கிளப்பிவரும் நிலையில், மேடையில் நின்று மாணவர்களுக்கு அவர் கையால் பட்டம் கொடுக்கச் செய்த சம்பவம், பெற்றோரைக் கொதிப்படையச் செய்திருக்கிறதாம்!
சூரியக் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் மலர்ச்சிக் கட்சியின் ‘உலக’ புள்ளி, தூங்கா நகரத்தில் மக்கள் பிரதிநிதியாகவும் இருக்கிறார். கஷ்டமோ, நஷ்டமோ... மலர்ச்சிக் கட்சியிலேயே பயணிக்கும் அவருக்கு, இப்போது சூரியக் கட்சி நிர்வாகிகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறதாம். அதேநேரத்தில், மலர்ச்சிக் கட்சியிலும் உட்கட்சிப்பூசலால் அவதியடைந்துவருகிறாராம். இந்த நிலையில், மீண்டும் தூங்கா நகரத்தில் சீட் கிடைக்காது என்று எண்ணியவர், ‘தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள தாய்க் கழகத்திலேயே இணைந்துவிடலாமா?’ என்று யோசிக்கிறாராம். அதேநேரம், ‘அரசியலில் தன்னை அடையாளம் காட்டிய மலர்ச்சிக் கட்சித் தலைமை வருத்தப்படுவாரோ?’ என்ற குழப்பமும் ஏற்பட்டிருப்பதால், நெருக்கமானவர்களிடம் தன் முடிவு குறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறாராம்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடியில் சமீபத்தில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்துக்கு போலீஸாரின் அனுமதி இல்லை. ஆனாலும், அந்தப் பனையில் கள் இருக்கிறதா என போலீஸார் நடத்திய சோதனையில், சீமான் ஏறுவதாக இருந்த மரத்தில் சுண்ணாம்பு கலந்த பதநீரே வைக்கப்பட்டிருந்ததால், போலீஸார் அதைக் கண்டுகொள்ளவில்லை.

சீமானும் மரத்தில் ஏறி, பதநீரையே இறக்கியிருக்கிறார். ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பிற பனைத் தொழிலாளர்களிடம் முன்கூட்டியே பேசி சுமார் 500 லிட்டர் வரை கள் சேகரித்து வைத்திருந்திருக்கிறார்கள். அதைத்தான், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை போலீஸார் கண்டுபிடிக்காமல் கோட்டைவிட்டிருக்கிறார்கள்!
‘ஆபரேஷன் சிந்தூருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்’ எனச் சொல்லி, மத்திய அமைச்சர் ஒருவரின் அப்பாயின்ட்மென்ட்டை வாங்கி, அவரைச் சந்தித்திருக்கிறார் பணிவானவரின் வாரிசுப் புள்ளி. ஆனால், வாழ்த்துத் தெரிவித்த கையோடு, தனக்கு பா.ஜ.க-வின் ‘யுவ மோர்ச்சா அணி’யில் பொறுப்பு கேட்டாராம். இதனால் அதிர்ந்துபோன அந்த அமைச்சர், ‘கட்சி விவகாரங்களைப் பேசவேண்டிய ஆளும் நானில்லை. இடமும் இது இல்லை. தப்பான அட்ரஸுக்கு வந்துவிட்டீர்கள்...’ எனக் கடிந்துகொண்டிருக்கிறார்.
ஆனாலும், அவரை விடாத வாரிசுப் புள்ளி, ‘வெங்கையா நாயுடுவின் பேரன் திருமணத்துக்காக, அமித் ஷா ஜி சென்னைக்கு வந்திருந்தபோதே, அவரிடம் என் கோரிக்கையை முன்வைத்தேன். அவரும் பார்ப்பதாகச் சொல்லியிருந்தார். நீங்களும் அழுத்தம் கொடுத்தால் எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்’ என விடாப்பிடியாகக் கெஞ்சியிருக்கிறார். ஆனாலும், அந்த அமைச்சர் மறுத்துவிட, வெறும் கையோடு கிளம்பியிருக்கிறார் வாரிசு!
அ.தி.மு.க சார்பில் ராஜ்ய சபா எம்.பி-யாக இன்பதுரையும், தனபாலும் தேர்வுசெய்யப்பட்ட கையோடு, இருவரும் சேலத்துக்குச் சென்று, எடப்பாடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து கோவைக்குச் சென்று, இருவரும் வேலுமணியையும் சந்தித்து வாழ்த்து பெற்றது, அ.தி.மு.க-வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே, அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின் இல்ல விழாவில் எடப்பாடிக்கு இணையாக வேலுமணிக்கும் கட்அவுட் வைக்கப்பட்ட விவகாரம், கட்சிக்குள் அனலை உண்டு பண்ணியது. அந்த அனல் அணைவதற்குள், ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்ட இருவரும் மெனக்கெட்டு கோவைக்குச் சென்று வேலுமணியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்கள்.
“இந்தச் சம்பவம், ‘எடப்பாடிக்குப் போட்டியாக வேலுமணி தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்’ என்கிற அளவுக்கு, கட்சிக்குள் சர்ச்சையைப் பற்றவைத்திருக்கிறது” என்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தினர்!