டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 அறிமுகம்..! சிறப்பம்சங்கள் என்ன?
திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
தொழில் துறையில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) தொடக்கிவைத்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று முதல் ஜூன் 23 வரை நடைபெறுகிறது.
நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 11.9% ஆகும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 14 தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளோம். இன்னும் உருவாக்கவுள்ளோம்.
பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது. மோட்டார் வாகனம், ஆயத்த ஆடைகள், தோல் பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்.
ஜவுளி இயந்திரங்கள், மின்னணு பொருள்கள் உற்பத்தியில் 2-வது இடம். இந்தியாவின் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் உற்பத்தியில் 17.66 சதவீதத்துடன் இரண்டாம் இடம்.
தமிழ்நாட்டில் தொழில் முனைவோரில் பெண்களின் விழுக்காடு 30%. இந்தியாவில் 14.90 லட்சம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில் 6,30,000 பேர் அதாவது 42% பேர் தமிழ்நாட்டுப் பெண்கள்.
2021- 22ம் ஆண்டு முதல் ஏற்றுமதிகளை அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தொழில் வளர்ச்சி, தொழில் துறை, தொழிலாளர் நலனுக்கும் என்ன தேவை என்பதை கண்காணித்து செயல்படுகிறோம்.
பல்வேறு சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கடனட்டை 4 ஆண்டுகளில் 59,915 புதிய தொழில்முனைவோருக்கு ரூ. 2,031 கோடி மானியத்துடன் ரூ.5,250 கோடி கடன் வழங்கியுள்ளோம். அதனால் திமுக என்றாலே தொழில் வளர்ச்சிதான்" என்று பேசினார்.
இதையும் படிக்க | வெடித்துச் சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!