ஸ்கைப் சேவை நிறுத்தம்! பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்திய வசதி!
ஸ்கைப் இணையதளப் பக்கம் மே 5ஆம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கு மாற்றாக புதிய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட டீம்ஸ் என்ற செயலியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. டீம்ஸ் செயலி ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்தாலும், பல்வேறு புதிய அம்சங்களுடன் ஸ்கைப்புக்கு மாற்றாக கொண்டுவரப்படவுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளுக் ஒன்று ஸ்கைப் செயலி. கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கைப் செயலி, பாதுகாக்கப்பட்ட விடியோ அழைப்புகளுக்கு புகழ்பெற்றது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இச்செயலி, தொழில் நிறுவனங்கள் முதல் தனிநபர்கள் வரை என 66 கோடி பயனர்களைக் கொண்டிருந்தது. விடியோ அழைப்பு வழங்கும் செயலிகளில் 2010ஆம் ஆண்டில் அதிகபட்ச பயனர்களைக் கொண்ட செயலியாக ஸ்கைப் இருந்தது.
இந்நிலையில் ஸ்கைப் செயலி மே 5ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இருக்காது என மைக்ரோசாஃப் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக டீம்ஸ் செயலியை மைக்ரோசாஃப் மேம்படுத்தியுள்ளது.
தற்போது ஸ்கைப் செயலியைப் பயன்படுத்திவரும் பயனர்கள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் மூலம் எந்தவித உள்நுழைவும் இல்லாமல் டீம்ஸ் செயலியில் உள் நுழையலாம். டீம்ஸ் செயலிக்கு புதிதாக உள்நுழைவுக் குறியீடுகளை, கடவுச் சொல்லை உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் ஸ்கைப் செயலியில் உள்ள தொடர்புகள், அழைப்புகளின் வரலாறு போன்ர தரவுகளை டீம்ஸ் செயலிக்கு மாற்றிக்கொள்ளும் வசதியையும் மைக்ரோசாஃப்ட் கொடுத்துள்ளது.
இதையும் படிக்க | ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்வு! ரூ. 87.34