``ஸ்டாலின் செய்த ஒரே சாதனை; உதயநிதியை துணை முதல்வராக ஆக்கியது மட்டுமே.." - எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
சேலம் பூலாம்பட்டி செல்லும் சாலையில் மேல்சித்தூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளரும் , எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் பேருந்தை நம்பி மக்கள் யாரும் ஏறமுடிவதில்லை. தமிழ்நாட்டில் இயங்கும் அரசு பேருந்துகள் பெரும்பாலும் கண்டமான பேருந்துகள். பெண்கள் இலவசமாக நகர பேருந்துகளில் பயணிக்கலாம் என்பது வெறும் அறிவிப்புதான். அது மக்களுக்கான நலத்திட்டம் இல்லை. பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதாக பேசும் முதல்வர் ஸ்டாலின் மாதமாதம் கடனை வாங்கிதான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார். இந்த கடன் மக்கள் தலையில்தான் விழும். திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் மக்களை பாதிக்கும் திட்டங்கள்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஊர் ஊராக சென்று பெட்டி வைத்து பொதுமக்களிடம் மனு வாங்கினார். ஆனால் தற்போது அந்த பெட்டியை திறந்து மக்கள் பிரச்னைகளை தீர்க்கவில்லை. அத்தனையும் ஏமாற்று வேளை. கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்..
இந்த நிலையில் தான் சேலத்தில் ஒருவரை சுற்றுலாத்துறை அமைச்சராக நியமித்துள்ளனர். அவரோ தமிழ்நாட்டுக்கே அமைச்சர் என்று தெரியாமல் சேலத்தை மட்டுமே சுற்றி சுற்றி வருகிறார். இத்தனை நாள்கள் கும்பகர்ணனைப் போல தூங்கி விட்டு தற்போது தேர்தல் நெருங்குவதால் மக்களை சந்தித்து மனுக்களை பெறுவதாக நாடகத்தை அறங்கேற்றி வருகிறார் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன். அத்தனையும் வெளிவேசம்.
அதேப்போல தான் அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. ஒரு ஆண்டில் முடிய வேண்டிய பணியை 41 மாதங்களாகியும் முடிக்கவில்லை. இது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்.
இந்த திட்டத்தை திமுக அரசு கொண்டுவந்ததாக வேட்டி மாற்றி கட்டிய அமைச்சர் ஒருவர் சொல்கிறார். இது பச்சைபொய். இந்த திட்டத்தை யார் கொண்டுவந்தது என்று மக்களுக்குத் தெரியும். பொய் சொல்லியே பிழைப்பு நடத்துவது திமுகவின் வழக்கம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முறைகேடாக ஏரிகளில் மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
லஞ்சம், லாவண்யம் அதிகம்...
திமுக ஆட்சி அமைந்த 41 மாத கால ஆட்சியில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை; திமுக கொண்டுவரப்பட்ட திட்டத்தில் மக்கள் எந்த பயனும் பெறவில்லை. எந்தத் துறையை எடுத்தாலும் ஊழல்.. அனைத்து துறைகளிலும் லஞ்சம், லாவண்யம் அதிகம்... இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணிகள் நடைபெறும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஊழல் செய்வதில் தமிழகம் தான் முதலிடம். திமுக தலைவர் ஸ்டாலின் நீங்கள் சொன்னபடி நான் சொல்லும் ஜோசியம் பழிக்கும்; 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும்.
திமுக கார்ப்பரேட் கம்பெனியில் திமுக தலைவர் ஸ்டாலின் சேர்மன்... உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் இயக்குனராக உள்ளனர். கருணாநிதி மன்னராக இருந்தபோது அவரது மகன் ஸ்டாலினுக்கு முடி சூட்டப்பட்டது; கருணாநிதி மறைவிற்குப் பிறகு முதல்வராக ஸ்டாலின் ஆகியுள்ளார். ஸ்டாலின் மன்னராக இருக்கும் நிலையில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இளவரசராக உள்ளார். இவருக்கு முடிசூட்ட முதல்வர் துடிக்கிறார். வாரிசு அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இருக்கும்.
முதல்வர் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை; உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கியது மட்டுமே. திமுக அமைச்சர் ஒருவர் கூறுகையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமையில்லை என்று கூறினார்; ஆளுமை இருந்ததால்தான் நான்கரை ஆண்டு காலம் ஆட்சி புரிந்தேன். அதிமுக ஆட்சியை களைக்க எத்தனை சதித்திட்டங்கள் தீட்டப்பட்டது. அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் மூக்கின் மீது விரல் வைக்கும் அளவிற்கு அதிமுக சிறப்பான ஆட்சி கொடுத்தது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs