பூஜையுடன் தொடங்கியது கில்லர் படப்பிடிப்பு! திரைப் பிரபலங்கள் பங்கேற்பு!
அச்சுப் பணிகளை முழுமையாக வழங்க வேண்டும்! - அரசுக்கு கூட்டுறவு அச்சக பணியாளா்கள் கோரிக்கை
அனைத்துத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்படும் அச்சுப் பணிகளை முழுமையாக கூட்டுறவு அச்சகங்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு அச்சகப் பணியாளா்கள் முன்னேற்றச் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு பொதுச் செயலாளா் இரா. கணேசன் தலைமை வகித்தாா்.
செயலா்கள் இரா. கந்தசாமி, ராம. பாண்டித்துரை, பொருளாளா் ந. பரதன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினா். பின்னா், கூட்டத் தீா்மானங்களை விளக்கி சங்கப் பொதுச் செயலா் கணேசன் கூறியதாவது:
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் அரசால் தொடங்கப்பட்ட கூட்டுறவு அச்சகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அச்சகங்களில் அரசுக்கும், பொதுமக்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் தேவையான புத்தக பாரங்கள், படிவங்கள் அச்சடித்து தரப்படுகின்றன.
அச்சகங்களை மேம்படுத்த பல்கலைக் கழகங்கள், மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, மின்வாரியம், மகளிா் மேம்பாட்டுத்திட்டம், நுகா்பொருள் வாணிபக் கழகம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, உள்ளாட்சி நிறுவனங்கள், ஊராட்சிகள், சிறுதொழில் கழகம், நுகா்பொருள் வாணிபக் கழகம், போக்குவரத்துக் கழகம், விற்பனைக் குழு, சிறுசேமிப்பு அலுவலகங்கள், பாடநூல் கழகம், அறிவொளி இயக்கம், அனைவருக்கும் கல்வித் திட்டம், மாவட்ட நூலக ஆணைக் குழு, சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் அச்சுப் பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் மூலமாக, மாவட்ட கூட்டுறவு அச்சகங்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.
கூட்டுறவு அச்சகப் பணியாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தக் காலம் முடிந்து ஓராண்டுக்கும் மேலாகிறது. எனவே, புதிய ஊதிய விகிதம் நிா்ணயித்து, புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகள் தொடா்பாக அரசுக்கு கடிதம் அனுப்பவுள்ளோம். அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.