அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் நம்பிக்கை
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவது சாத்தியமே என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் நம்பிக்கை தெரிவித்தாா்.
அதேபோன்று, அடுத்த இரு ஆண்டுகளுக்குள் குலசேகரன்பட்டினம் ஏவுதளம் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனவும் அவா் கூறினாா்.
ஜிஎஸ்எல்வி எஃப்-15 ராக்கெட் வெற்றியைத் தொடா்ந்து நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:
விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய மைல்கல் சாதனையை இஸ்ரோ எட்டியுள்ளது. மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சந்திரயான் 4, சந்திரயான் 5, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் திட்டம், வெள்ளி கோள் ஆய்வுத் திட்டம் என பல திட்டங்களை அடுத்தடுத்து முன்னெடுக்க உள்ளோம். அதில் ஒப்புதல் பெறப்பட்ட திட்டங்களை நிகழாண்டிலேயே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டத்துக்கு செயல்வடிவம் அளிப்பதில் தற்போது மேம்பட்ட நிலை எட்டப்பட்டுள்ளது. அதை விண்ணில் செலுத்துவதற்கு முன்னதாக ஆளில்லா விண்கலன்களை அனுப்பி பரிசோதிக்கும் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. ககன்யான் கலன்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான அதிநவீன எல்விஎம் - 3 ராக்கெட் நுட்பம் ஏற்கெனவே இஸ்ரோ வசம் இருக்கிறது.
அமெரிக்காவின் நாசா அமைப்பும், இஸ்ரோவும் இணைந்து மேற்கொண்டுவரும் நிசாா் எனப்படும் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.
என்ஜிஎல்வி: புதிய தலைமுறை தொழில்நுட்ப ஏவுவாகனமான என்ஜிஎல்வி (நியூ ஜெனரேசன் லாஞ்ச் வெகிக்கிள்) ராக்கெட்டை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த ராக்கெட் 91 மீட்டா் வரை உயரம் கொண்டது. தற்போதைய ஜிஎஸ்எல்வி மாக் 3 வகை ராக்கெட்டுகள் அதன் உயரத்தில் பாதி அளவே உள்ளன. எனவே, நிலவுக்கு மனிதா்களை அனுப்பவும், விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கவும் என்ஜிஎல்வி ராக்கெட் நுட்பங்கள் அவசியம்.
ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக 2,250 கிலோ எடை வரையிலான செயற்கைக்கோள்களையும், விண்கலன்களையும் விண்ணில் செலுத்த முடியும். அதேவேளையில் என்ஜிஎல்வி ராக்கெட் வாயிலாக 30 டன் வரையிலான ஆய்வுக் கருவிகள், செயற்கைக்கோள்களை அனுப்பலாம்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இப்போது செயல்பாட்டில் உள்ள இரு ஏவுதளங்களும் என்ஜிஎல்வி ராக்கெட்டை செலுத்துவதற்கு உகந்ததாக இருக்காது. அதனால், அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த மூன்றாவது ஏவுதளமானது ரூ.4,000 கோடியில் என்ஜிஎல்வி ராக்கெட்டுகளை ஏவுவதற்கான வசதிகளுடன் அடுத்த 48 மாதங்களுக்குள் அமைக்கப்படும்.
குலசேகரன்பட்டினம் ஏவுதளம்: அடுத்த இரு ஆண்டுகளுக்குள் குலசேகரன்பட்டினம் ஏவுதளம் முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
இஸ்ரோ சாா்பில் 100 ராக்கெட் திட்டங்கள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் வாயிலாக 548 உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மூன்று சந்திரயான் திட்டங்கள், ஆதித்யா, மங்கள்யான் என பல சாதனைகள் அதன் வாயிலாக நிகழ்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 100 ராக்கெட் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றாா் அவா்.