தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் சரிந்து முடிந்த பங்குச் சந்தை!
மும்பை: ரெப்போ விகிதம் கடந்த 5 ஆண்டுகளாக 6.50% ஆக இருந்த நிலையில், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்று 6% ஆக குறைத்தது. அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் ஆசிய சந்தைகளில் பெரும்பாலும் சரிந்த நிலையில், பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று சரிந்து முடிந்தது.
முந்தைய அமர்வில் வலுவான மீட்சியை பதிவு செய்த பிறகு இன்றைய வர்த்தகத்தில் உள்ளூர் சந்தைகள் வெகுவாக அழுத்தத்தில் இருந்தது.
ஆசிய பங்குச்சந்தைகளில் பலவீனமான போக்குகளை பிரதிபலிக்கும் வகையில், உள்நாட்டில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் சரிந்த நிலையில், சீன இறக்குமதிகள் மீது 104 சதவிகித வரி உள்பட சமீபத்திய அமெரிக்க கட்டணங்கள் நடைமுறைக்கு வந்ததால் வர்த்தகத்தின் பிற்பகுதியும் சரிந்து முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 554.02 புள்ளிகள் சரிந்து 73,673.06 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 178.85 புள்ளிகள் குறைந்து 22,357 புள்ளிகளாக இருந்தது.
மத்திய நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 393.77 புள்ளிகள் குறைந்து 73,833.31 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 137.70 புள்ளிகள் குறைந்து 22,398.15 ஆகவும் வர்த்தகமானது.
வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 379.93 புள்ளிகள் சரிந்து 73,847.15 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 136.70 புள்ளிகள் குறைந்து 22,399.15 புள்ளிகளாக நிலைபெற்றது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக ரிசர்வ் வங்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை முந்தைய கணிப்பான 6.7 சதவிகிதத்திலிருந்து 6.5 சதவிகிதமாகக் குறைத்தது.
கடந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 9 முதல் இந்திய இறக்குமதி மீது 26 சதவிகித பரஸ்பர கட்டணங்களை அறிவித்த நிலையில், சீன இறக்குமதிகள் மீதான மொத்த அமெரிக்க வரிகள் இன்று (புதன்கிழமை) 104% ஐ எட்டும் என்று வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
இது இரு பொருளாதார சக்திகளுக்கும் இடையே ஏற்கனவே பதட்டமான வர்த்தக மோதலை அதிகரித்துள்ளது. வாஷிங்டன் திட்டமிட்ட கட்டண உயர்வைத் தொடர்ந்தால், 'இறுதிவரை போராட்டம்' என்று பெய்ஜிங் எச்சரித்ததைத் தொடர்ந்தும் இந்த உறுதிப்படுத்தல் வந்துள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மஹிந்திரா, இன்போசிஸ், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, லார்சன் & டூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்த நிலையில் நெஸ்லே, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
நிஃப்டியில் விப்ரோ, எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, ட்ரெண்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் நெஸ்லே, ஹெச்யுஎல், டாடா கன்ஸ்யூமர், டைட்டன் கம்பெனி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.
பிஎஸ்இ-யில் மிட்கேப் குறியீடு 0.8 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 1 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.
நுகர்வோர் சாதனங்கள் (0.3%) மற்றும் எஃப்எம்சிஜி (1.5%) தவிர, மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிந்தது. அதே வேளையில் ரியால்டி, ஐடி மற்றும் பொதுத்துறை வங்கி தலா 2 சதவிகிதம் சரிந்து முடிந்தது.
ஆசிய சந்தைகளில் டோக்கியோவின் நிக்கேய் - 225 குறியீடு, தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை சரிந்து முடிந்தது. டோக்கியோவின் நிக்கேய் - 225 குறியீடு 4 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது முடிந்தது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கணிசமாக சரிந்து முடிந்தது.
ஸ்ரீ மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) ஏப்ரல் 10 ஆம் தேதியன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: லேண்ட் ரோவரின் டிஃபெண்டர் ஆக்டா: புதிய மாடல் வெளியீடு!