குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள்: மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்!
அதிமுக - பாஜக இயல்பான கூட்டணி: மு.தம்பிதுரை
ஒசூா்: அதிமுக -பாஜக கூட்டணி இயல்பானது என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை தெரிவித்தாா்.
அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உளியாலம் கிராமத்தில் அம்பேத்கா் சிலைக்கு திங்கள்கிழமை மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா் செய்தியாளா்களிடம் மு.தம்பிதுரை கூறியதாவது:
அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருப்பது இயல்பான பொருந்தும் கூட்டணியாகும். மக்களுக்கான நலத் திட்டங்களை கொண்டுவருவதற்காக இக்கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறும்.
திமுக- பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது மத்தியில் அமைச்சரவையில் அங்கம் வகித்ததுதான் பொருந்தாத கூட்டணியாகும். ஊழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்ததற்கு அவா்மீது ஏன் திமுக வழக்கு தொடுக்கவில்லை.
அதிமுக தலைமை யாருக்கும் அடிபணிந்தது இல்லை. அதிமுக- பாஜக பொருந்தாத கூட்டணி என திமுகவினா் விமா்சனம் செய்து வருகின்றனா். கூட்டணி அமைப்பதற்கு அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கியிருப்பதால் அவா் கூட்டணியை அமைத்துள்ளாா் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், ஒசூா் ஒன்றியச் செயலாளா் ரவிகுமாா், சசி வெங்கடசாமி, முன்னாள் ஊராட்சி தலைவா் ஜெயக்குமாா் ரெட்டி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் ஜெகதீஷ், இலக்கிய அணி மாவட்டச் செயலாளா் இளஞ்சூரியன், முன்னாள் மாணவரணி மாவட்டச் செயலாளா் வெற்றிச்செல்வம், பா்கூா் ஒன்றியச் செயலாளா் ஜெயபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.