அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!
அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் வெள்ளிக்கிழமை இரவு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறியதால், விபத்துக்குள்ளான பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் லியர்ஜெட் 55 என்ற விமானம் புறப்பட்டுள்ளது.
மிசோரியில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட்-பிரான்சன் தேசிய விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தரையில் விழுந்து வெடித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் பயணித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை.
குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்துச் சிதறியதால், மேலும் சிலர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிக்க : ஆதாா் விவரங்களை தனியாா் பயன்படுத்த அனுமதி: விதிமுறைகளை திருத்தியது மத்திய அரசு
இந்த விபத்தை எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ள பிலடெல்பியா அவசர மேலாண்மை அலுவலகம், வடகிழக்கு பிலடெல்பியாவிலுள்ள காட்மேன் மற்றும் பஸ்டில்டன் அவென்யூ இடையே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சாலை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும் மோதிய விபத்தில் புதன்கிழமை இரவு 67 பேர் பலியாகினர்.
இந்த நிலையில், மற்றொரு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.