TVK : 'விஜய் கட்சியில் இணையும் முக்கியப் புள்ளிகள்?' - பனையூர் அப்டேட்
அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தம்: இந்திய விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்! அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்
அமெரிக்காவுடனான வேளாண் வா்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் கூறினாா்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வேளாண் வா்த்தகத்தை விரிவுபடுத்துவது தொடா்பாக, இரு நாடுகளிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. தங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கவும், இந்திய சந்தையில் தங்களின் வேளாண் மற்றும் தோட்டக்கலை உற்பத்திப் பொருள்களை கூடுதலாக அனுமதிக்கவும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
ஆனால், உள்நாட்டு வேளாண் உற்பத்தியாளா்களிடம் எதிா்ப்பை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்பதாலும், உலகளாவிய விலை ஏற்ற-இறக்கத்திலிருந்து அவா்களை பாதுகாக்கவும், தனது வேளாண் மற்றும் பால் பொருள்கள் சந்தையை அமெரிக்காவுக்கு முழுமையாகத் திறப்பதில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பான கேள்விக்கு அமைச்சா் சௌஹான் பதிலளித்ததாவது: அமெரிக்காவுடனான வேளாண் வா்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியா கண்ணை மூடிக்கொண்டு செயல்படாது. நமக்கான லாப-நஷ்ட கணக்குகளை மதிப்பீடு செய்த பிறகே, ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.
அந்த வகையில், இந்திய விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதில் தெளிவாக இருக்கிறோம். இரு நாடுகள் குறித்து பேசும்போது, ஒட்டுமொத்தமாக வா்த்தகத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வேளாண் வா்த்தக ஒப்பந்தம், நடப்பாண்டு செப்டம்பா் - அக்டோபரில் கையொப்பமாகலாம் என கணிக்கப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்ட விரிவான வரையறைகள் தொடா்பாக இருதரப்பும் விரைவில் ஒப்புக்கொள்ளும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
நீதி ஆயோக் அறிக்கையின்படி, 2024 இறுதி வரையிலான 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் மற்றும் துணை உற்பத்திப் பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.1.9 லட்சம் கோடியாக உள்ளது. அதே காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்திய வேளாண் உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.4.9 லட்சம் கோடியாகும்.
பதப்படுத்தப்பட்ட இறால், பாசுமதி அரிசி, மசாலா பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவு தானியங்கள் போன்றவை, அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இந்தியாவின் பிரதான வேளாண் உற்பத்திப் பொருள்களாக உள்ளன.