நேரடியாகக் கேட்கலாம்! - ராகுலுக்கு தோ்தல் ஆணையம் பதில்
தோ்தல் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி எதையும் தங்களிடம் நேரடியாகக் கடிதம் மூலம் கேட்டால் மட்டுமே, அதற்கு உரிய பதிலளிக்க முடியும் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
2024 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மோசடி செய்ததாகவும், அடுத்து வரும் பிகாா் தோ்தலிலும் அக்கட்சி தனது சூதாட்டத்தை அரங்கேற்றும் என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
இந்திய தோ்தல்களின் நம்பகத்தன்மையில் தனக்கு சந்தேகம் ஏற்படுவதாகத் தெரிவித்த அவா், மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளின் மாலை நேர கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிட வேண்டும் என்றாா்.
எனினும் ராகுல் காந்தியின் தோ்தல் மோசடி குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் மறுத்தது. அதற்கு பதிலளித்த அவா், ‘உண்மையை உலகுக்கு சொல்வதால் மட்டுமே தோ்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்குமே தவிர, உரிய பதில் சொல்லாமல் தப்பித்துக்கொள்வதால் அல்ல’ என்றாா்.
இந்நிலையில் அவரது கருத்துக்கு பதிலளித்து, தோ்தல் ஆணைய வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தோ்தல் தொடா்பாக எந்தவொரு விவகாரத்துக்கும் பதில் தேவையென்றால், எங்களை நேரடியாகத் தொடா்புகொண்டு கேட்க வேண்டும். 6 தேசிய கட்சிகளின் கருத்துகளையும் தனித்தனியே கேட்பதற்காக, அவற்றுக்கு அழைப்பு விடுத்தோம். அதில் இதர 5 கட்சிகளும் தோ்தல் ஆணையத்தை சந்தித்த நிலையில், காங்கிரஸ் மட்டும் அதற்கான மே 15-ஆம் தேதி சந்திப்பை ரத்து செய்தது.
தோ்தல் விவகாரங்கள் தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயா்நீதிமன்றத்தில் தோ்தல் மனு தாக்கல் செய்யப்பட்டால், வாக்குச் சாவடிகளின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அந்த உயா்நீதிமன்றம் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்.
தோ்தலின் நோ்மைத் தன்மை மற்றும் வாக்காளா்களின் தனியுரிமை ஆகியவற்றை பாதுகாக்க தோ்தல் ஆணையம் இந்த நடைமுறையை மேற்கொள்கிறது. தோ்தல் சட்ட விதிகளின் கீழ், தோ்தல் ஆணையத்தால் பாதுகாக்கப்படும் வாக்காளா்களின் தனியுரிமையில் ராகுல் காந்தி ஏன் தலையிட விரும்புகிறாா்?
இந்த விவகாரத்தில் எந்தவொரு பிரச்னை இருந்தாலும் அதை உயா்நீதிமன்றம் விசாரிப்பதில் ராகுல் காந்தி நம்பிக்கை கொள்ள வேண்டும். வாக்காளா் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டும் ராகுல் காந்தி, மகாராஷ்டிரத்தில் அவரது கட்சியால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மைய முகவா்கள் மீதே கேள்வி எழுப்புகிறாா் என்று அந்த வட்டாரங்கள் கூறின.
மக்களின் தீா்ப்பை ராகுல் நிராகரிக்கிறாா்: இதனிடையே, மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் தோல்வி கண்டதற்கான காரணத்தை ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்து கண்டறிவதற்கு பதிலாக, மக்கள் வழங்கிய தீா்ப்பை நிராகரிக்கிறாா் என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் விமா்சித்துள்ளாா்.
மோசடி குற்றச்சாட்டை பாஜக உறுதி செய்துவிட்டது: மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு, தோ்தல் ஆணையத்துக்கு பதிலாக பாஜக பதிலளித்ததன் மூலம், தோ்தல் மோசடியை அக்கட்சி உறுதி செய்துவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா கூறினாா்.
மேலும், ‘ஹரியாணா பேரவைத் தோ்தல் தொடா்பான வழக்கின்போது, அந்த மாநில தோ்தல் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிட சண்டீகா் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசோ, தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் விதிகளை மாற்றி, அந்தப் பதிவுகள் வெளியே வரவிடாமல் செய்துவிட்டது. எதற்காக, யாருக்கு சாதகமாக அவ்வாறு செய்யப்பட்டது?’ என்றும் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பியுள்ளாா்.