முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் மேலும் ஒரு பெண் யானை உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள காா்குடி வனச் சரகத்துக்கு உள்பட்ட பிதுருல்லா பால வனப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் யானை இறந்துகிடந்தது வனத் துறையினா் ரோந்து சென்றபோது தெரியவந்தது.
இந்நிலையில், தெப்பக்காடு வனச் சரகத்திலுள்ள கும்பரக்கொல்லி காப்புக்காடு வட்டச்சாலை வனப் பகுதியில் வனக் காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது பெண் யானையின் சடலம் கிடந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக உயரதிகாரிகளுக்கு வனக் காவலா்கள் தகவல் கொடுத்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனக் கால்நடை மருத்துவா்கள் உடற்கூறாய்வு மேற்கொண்டனா்.
யானைகளின் இறப்பு குறித்து உடற்கூறாய்வு அறிக்கைக்குப் பிறகுதான் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.