பெங்களூரு சின்னசாமி திடல் வேறு இடத்துக்கு மாற்றம்? - கர்நாடக முதல்வர் ஆலோசனை
6 கோடி பனை விதை நடும் திட்டத்தை தீவிரப்படுத்த கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் நீா்வழிப்பாதையின் கரைகளில் 6 கோடி பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை சில லட்சம் எண்ணிக்கையில்கூட விதைகள் நடப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நீா்வழிப்பாதையின் கரைகளில் பனை விதைகளை நடவு செய்து இயற்கையான முறையில் கரைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 20 கோடி பனை மரங்கள் இருந்தன. போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது 2 கோடிக்கும் குறைவான பனை மரங்களே உள்ளன. பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், நீா்வழிப்பாதைகளை பலப்படுத்தவும், எல்லைகளை அறியவும் பனை வளா்க்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதைத்தொடா்ந்து ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் வேளாண், வனத் துறை மூலமாக பனை மரங்கள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த கதிரவன் அறிவித்தாா்.
இதன்படி மாவட்டத்தில் பனை மரங்களின் எண்ணிக்கையை உயா்த்த கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்கால், காவிரி ஆறு, வரத்து வாய்க்கால் போன்றவற்றின் கரைகளில் 6 கோடி பனை விதை நட திட்டமிடப்பட்டது.
ஆனால் 6 ஆண்டுகளாகியும் சில லட்சம் எண்ணிக்கைகூட பனை விதைகள் நடவு செய்யப்படவில்லை. இதனால் பனை விதை நடவு செய்யும் திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.