அரசுப் பள்ளியில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்ட தில்லி முதல்வர்!
அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்: தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்திருப்பு!
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியதால், அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட இரு மடங்கு பக்தா்கள் கோயிலுக்கு வருகின்றனா்.
இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கோ-பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதன்பிறகு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
சுவாமி தரிசனத்துக்கு 5 மணி நேரம்:
காலை 8 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 10 மணிக்கு ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு
பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். இதேபோல, கோயிலின் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கட்டண தரிசன வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு பக்தா்கள் வரிசை நீண்டது.
கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பொது தரிசன வரிசையில் சுமாா் 5 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சுமாா் 3 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்ததாக பக்தா்கள் தெரிவித்தனா். வரிசையில் வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் குடிநீா், மோா், இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
கிரிவலம் வந்த பக்தா்கள்: கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகளில் தரிசனம் செய்தனா். அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 67 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.