திமுக அரசைப் பற்றி பேச இபிஎஸ்ஸுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது: அமைச்சர் ரக...
நெல்லை: ``பிரிவினை, வன்முறையை தூண்டும் வலைதள பதிவுகளை போட்டால்..'' - எச்சரிக்கும் போலீஸ் கமிஷனர்
நெல்லையில் இரு பிரிவினர்களுக்கு இடையே சமூக ஊடகங்கள் வாயிலாக பிரிவினையைத் தூண்டி, பொதுமக்களிடையே தவறான புரிதலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் நபர்களை போலீஸார் கண்டுபிடித்து களை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக பயங்கர ஆயுதங்களை காட்சிப்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரச்னைக்குரிய பதிவுகளை வெளியிடும் நபர்களின் சமூக வலைதள கணக்குகள் மட்டுமின்றி, அவர்களை பின்தொடரும் பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சட்டத்திற்கு புறம்பான பதிவுகளை யாரேனும் பதிவிட்டிருந்தாலோ அல்லது பகிர்ந்திருந்தாலோ அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட போலீஸார் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக வலைதளங்களை கையாளுவது குறித்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போலீஸாரின் சமூக ஊடகப்பிரிவு, சட்டம் ஒழுங்கினைப் பாதிக்கும் பதிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2024-ம் ஆண்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட 36 பேர் மீது 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு தற்போது வரை 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் சமூக வலைதளங்கள் குறித்து முழுமையான விழிப்புணர்வு இல்லாத பல இளைஞர்கள், அதை தவறாக பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குற்றவழக்கு நிலுவையில் உள்ளவர்களை புகழ்ந்து தள்ளும் வீடியோக்களும், பிரிவினையை தூண்டும் பாடல்களுக்கு நடனமாடும் பதிவுகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இது குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜியும் (பொறுப்பு), மாநகர கமிஷனருமான சந்தோஷ் ஹாதிமணி கூறுகையில், “இளைஞர்கள் சமூக வலைதளங்களை கவனத்துடன் கையாள வேண்டும். பிரிவினையை தூண்டும் வகையிலான வீடியோக்கள் பதிவிடும் போக்கை தடுக்க ஊடக்கப்பிரிவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சர்ச்சை வீடியோக்களை பதிவிடுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.