திமுக அரசைப் பற்றி பேச இபிஎஸ்ஸுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது: அமைச்சர் ரக...
திருச்செந்தூர்: தூய்மை பணியாளர் கழிவுநீரில் மூழ்கி உயிரிழப்பு - வேலைக்கு வந்த முதல் நாளில் பரிதாபம்
நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகிலுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுடலைமணி, திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி உடல்நலக்குறைவால் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டு முதல் நாளாக நேற்று (08.06.2025) வேலைக்கு வந்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (09.06.2025) வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது.

இதனை முன்னிட்டு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நடந்து வருவதில் இடையூறு ஏற்படாமல் இருக்க, திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் சுற்றி உள்ள இடங்களில் பாதாள சாக்கடையில் இருந்து எந்தெந்த பகுதிகளில் கழிவு நீர் வெளியே வருகிறதோ அதனை சரி செய்வதற்காக தூய்மைப் பணியாளர்கள் அதனை உடனடியாக திறந்து சரி செய்து அதனை சீரமைக்கும் முயற்சியில் நேற்று ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனையின் பின்புறம் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுடலைமணி, அங்கு சென்று அவரது குழுவினருடன் சாக்கடையை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மணியின் உடலை மீட்டனர். ஆனால், அவர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. வேலைக்கு வந்த முதல் நாளிலேயே மாற்றுத்திறனாளி தூய்மைப் பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.