அய்யனார் துணை தொடரில் சிங்கப் பெண்ணே நடிகை!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் நடிகை திவ்யா விஜயகுமார் இணைந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப் பெண்ணே தொடரில் யாழினி என்ற பாத்திரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் திவ்யா நடித்திருந்த நிலையில், மற்றொரு பிரபல தொடரில் தற்போது இணைந்துள்ளார்.
அய்யனார் துணை தொடரில் 4 நாயகர்களில் ஒருவரான பல்லவனுக்கு ஜோடியாக திவ்யா நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார்.

இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.
நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது. எஞ்சியுள்ள மூவருக்கும் திருமணக் காட்சிகள் விரைவில் இடம்பெறவுள்ளன.

இதில், பல்லவனுக்கு ஜோடியாக நடிகை திவ்யா நடிக்கவுள்ளார். சிங்கப் பெண்ணே தொடரில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டைப் பெற்ற நிலையில், அய்யனார் துணை தொடரிலும் பாத்திரத்துக்கு வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | 9 மாதங்களில் நிறைவடையும் பிரபல தொடர்!