ரிஷப் பந்த் மீண்டு வர தோனியிடம் பேச வேண்டும்: சேவாக்
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் மோசமாக விளையாடி வருகிறார். இதிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனியிடம் ஆலோசனைப் பெற வேண்டுமென முன்னாள் வீரர் சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் தில்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பந்த் (27) இந்தாண்டு லக்னௌ அணிக்காக விளையாடுகிறார்.
அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த் இந்த சீசனில் 10 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
சிஎஸ்கேவுக்கு எதிராஜ்ன போட்டியை தவிர மற்ற போட்டிகளில் மோசமாக விளையாடியதால் சராசரி 10.28ஆக இருக்கிறது.
கடந்த சீசனில் 446 ரன்கள் குவித்த ரிஷப் பந்த்-க்கு தற்போது என்னானது? இதுக் குறித்து பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் கூறியதாவது:
ஐபிஎல் போட்டிகளில் ரன்கள் குவித்த முந்தைய விடியோக்களை ரிஷப் பந்த பார்க்க வேண்டுமெனக் கூறுவேன். அதைப் பார்த்தால் சிறிது நம்பிக்கை வரும். மேலும் எப்படி விளையாடினார் என்பதும் புரியும்.
சில நேரங்களில் வழக்கமாகச் செய்யும் சிலவற்றை நாம் மறந்துவிடுவோம். காயத்துக்குப் பிறகு ரிஷப் பந்த் வித்தியாசமாக இருக்கிறார்.
ரிஷப் பந்த்திடம் செல்போன் இருக்கிறது. அவர் யாருக்கு வேண்டுமானாலும் அழைக்கலாம். மனநிலை சரியில்லை எனில் எவ்வளவோ கிரிக்கெட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அழைத்துப் பேசலாம்.
ரிஷப் பந்த் தோனியை ரோல் மாடலாக (முன்மாதிரி) கருதினால் அவர் நிச்சயமாக அவரிடம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார்.