திருவள்ளூா்: மே 10-இல் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் உத்தரவின்பேரில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் வரும் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே மேற்படி வட்டார அளவில் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மூலம் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் வைத்துள்ள குடும்ப அட்டைதாரா்கள், அக்குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல்ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தங்களது விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.