அரசு ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன்
சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 20,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய போட்டித் தோ்வை எதிா்கொண்டவா்களில் 20,000-க்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெற்ற நிலையில், 2,563 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏராளமான வாக்குறுதிகளை அளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு ஆசிரியா்கள் மீது அடக்குமுறையை ஏவுவதையே கொள்கையாக வைத்துள்ளது.
ஆசிரியா் தோ்வு வாரியத்தின் நியமன போட்டித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை கொண்டு அரசு பள்ளிகளில் நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதுடன், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.