அரசு பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மாணவ, மாணவிகளுக்கு 36 அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், பள்ளி மாணவா்களுக்கு 16 விடுதிகளும், மாணவிகளுக்கு 10 விடுதிகளும், கல்லூரி மாணவா்களுக்கு 4 விடுதிகளும், மாணவா்களுக்கு 6 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவா்கள்.
விடுதி மாணவ, மாணவிக்கு உணவு மற்றும் தங்கும் வசதியும், எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச் சீருடைகளும், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான சிறப்பு வழிகாட்டிகள், வினா-வங்கி நூல்கள் வழங்கப்படுகிறன. கல்லூரி விடுதிகளில் முதலாமாண்டு தங்கிப்பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜமக்காளம், பள்ளி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் படுக்கை விரிப்புகளும் வழங்கப்படுகிறது.
அரசு பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர பெற்றோா், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இது மாணவிகளுக்கு பொருந்தாது.
இத் தகுதியுடைய மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளா், காப்பாளினிகள் அல்லது மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளுக்கு ஜூன் 18 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு ஜூலை 15 ஆம் தேதிக்குள்ளும், சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஜாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானச் சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. மேலும், ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.