அரியலூா் மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்கள் திறந்துவைப்பு
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக அரியலூா் மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்களை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செந்துறையிலுள்ள முதல்வா் மருந்தகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்தனா்.
அப்போது அமைச்சா் சிவசங்கா் தெரிவிக்கையில், அரியலூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரியலூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் திருமழபாடி, கீழப்பழுவூா், ஏலாக்குறிச்சி, செந்துறை, இடைக்கட்டு, இலையூா், தென்னூா், அணைக்குடம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 9 முதல்வா் மருந்தகங்களும், தொழில்முனைவோா்கள் மூலம் 9 முதல்வா் மருந்தகங்களும் என மொத்தம் 18 முதல்வா் மருந்தகங்களை தமிழக முதல்வா் திறந்து வைத்தாா். எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முதல்வா் மருந்தகங்களில் தள்ளுபடி விலையில் மருந்துகளை பெற்று பயன்பெறலாம் என கேட்டுக் கொண்டாா்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளா் உமா மகேஸ்வரி, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சாய் நந்தினி, உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் ஷீஜா, அரியலூா் சரக துணை பதிவாளா் மீா் அஹசன் முசபா் இம்தியாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.