அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்
பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு சாலையோரமாக திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பெட்ரோ நெட் என்ற நிறுவனம் கோவை முதல் கரூா் வரை விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதித்துள்ளது. பல்லடம் அருகே சுக்கம்பாளையம், கோடங்கிபாளையம், கோவை மாவட்டம், சூலூா் அருகே ராவத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் இந்த எண்ணெய் குழாய் பதித்துள்ள விவசாய நிலங்களில் மத்திய அரசின் ஐ.டி. பி.எல். நிறுவனம் எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தந்த கிராமங்களில் விவசாயிகள் 200 நாள்களுக்கும் மேலாக தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
ராவத்தூரில் இருந்து முத்தூா் வரை ஆங்காங்கே காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் கடந்த 10-ஆம் தேதி முதல் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், அவிநாசிபாளையத்தில் தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா். இதில் விவசாயிகளை பாதிக்கும் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தக் கோரி விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினா்.