திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜ...
அவையில் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை பேசிய மத்திய அமைச்சர் தா்மேந்திர பிரதான், தமிழக எம்.பி.க்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடுமையான எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து தர்மேந்திர பிரதான், சர்ச்சைக்குரிய அந்த கருத்தைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா்.
இருப்பினும், தா்மேந்திர பிரதானுக்கு திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் இன்று காலை பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டு வருகின்றனர்.
திமுக கூட்டணி எம்.பி.க்கள் கனிமொழி, ஆ. ராசா, டி.ஆர். பாலு, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கருப்பு உடை அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய கனிமொழி,
"தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையில் நாங்கள் கையெழுத்திட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் ஒருபோதும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்குகிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களையும் தமிழக எம்.பி.க்களையும் அமைச்சர் மரியாதைக் குறைவாக பேசியுள்ளார். இது அரசியலமைப்புக்கு எதிரானது.
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது. அவர் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அவைத் தலைவரை வலியுறுத்துவோம்" என்று பேசியுள்ளார்.