உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இந்தியா! சர்வதேச நிதி நாணயம் தகவல்
அஸ்ஸாம் பேரவையில் சுயேச்சை எம்எல்ஏவைத் தாக்க முயற்சி! பேரவை துணைத் தலைவர் மீது தாக்குதல்!
அஸ்ஸாம் சட்டப்பேரவை துணைத் தலைவரை காங்கிரஸ் எம்எல்ஏ தாக்கியதை தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை சுயேச்சை உறுப்பினரை பாஜக எம்எல்ஏ தாக்க முயற்சி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காங்கிரஸுக்கு எதிராக பாஜகவினரும் இன்று அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
அஸ்ஸாம் சட்டப்பேரவை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினர் அகில் கோகோய் மற்றும் பாஜக மூத்த உறுப்பினர் ரூப்ஜோதி குர்மி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனது இடத்தைவிட்டு எழுந்த குர்மி, அகில் கோகோய் நோக்கி வேகமாக வந்த நிலையில், சக உறுப்பினர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
எதிர்க்கட்சி உறுப்பினரை பாஜக உறுப்பினர் தாக்க முயற்சித்தற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அஸ்ஸாம் பாஜக தலைவர் திலீப் சைகியாவின் உத்தரவைத் தொடர்ந்து, அகில் கோகோயிடம் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரினார் குர்மி.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் அத்துமீறி நடந்துகொண்ட பாஜக உறுப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
அப்போது, சட்டப்பேரவைத் தலைவர் தங்களை பாதுகாக்கத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதனிடையே, இன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்துக்கு வருகைதந்த துணை பேரவைத் தலைவர் நுமோல் மோமினை நோக்கி வேகமாக ஓடிவந்த காங்கிரஸ் எம்எல்ஏ நூருல் ஹுடா அவரைத் தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முதலிதவி எடுத்துக் கொண்ட நுமோல், பேரவைக் கூட்டத்துக்கு கையில் கட்டுடன் வந்தார். காங்கிரஸ் எம்எல்ஏவின் செயலுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கண்டனம் தெரிவிதார்.
மேலும், ”பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த தலைவர் பேரவை வளாகத்துக்குள் தாக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு காங்கிரஸ் எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இடத்தைவிட்டு பாஜக எம்எல்ஏ எழுந்து வந்ததை பெரிதாக்கிய எதிர்க்கட்சியினர் இதற்கு கண்டனம் தெரிவிப்பார்களா?” என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரஸ் உறுப்பினருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க : நிதீஷ் குமார் மகனுக்கு திருமணமா? மணப்பெண் யார்?
இதில், சுயேச்சை உறுப்பினரைத் தாக்க முயன்ற பாஜக எம்எல்ஏ ரூப்ஜோதி குர்மி, 2006 ஆம் ஆண்டு முதல் பேரவை உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2021 இல் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.