ஆதரவற்றோரை சுட்டுக்கொன்றவருக்கு 40 ஆண்டுகள் சிறை?
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் ஆதரவற்றோரை சுட்டுக்கொன்ற நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
நெவேடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரத்தின் வடகிழக்கு பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் அங்குள்ள ஒரு நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே வீடுகளின்றி ஆதரவற்ற மக்கள் தங்களது முகாம்களில் தங்கியிருந்தனர். அப்போது, கருப்பு நிற காரில் இருந்து இறக்கிவிடப்பட்ட நபர் ஒருவர் ஆதரவற்ற மக்கள் குழுவை நோக்கி 14 முறை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பின்னர், அவர் மீண்டும் அந்த காரின் மூலம் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருக்கக் கூடும் என அப்போது சந்தேகிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீஸார் கிறிஸ்டோபல் ஒமர் பெரெஸ் (வயது 32) என்ற நபரைக் கைது செய்தனர். மேலும், தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவரது நிலை அபாயகரமான சூழலில் இருப்பதாகவும் அவர் இறந்தால் பெரெஸ்க்கு கடுமையான தண்டனை விதிக்கப்படக் கூடும் என அந்நாட்டு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: வாடிகனில் குவிந்த மக்கள்.. போப் பிரான்சிஸ் நலனுக்காக பிரார்த்தனை
இந்த வழக்கிற்கான விசாரணை தொடங்க திட்டமிடப்பட்டதற்கு ஒரு நாள் முன்பு, நேற்று (பிப்.24) அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு மனு தாக்கல் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருகின்ற 2025 ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று அவரது குற்றத்திற்கான தண்டனை விதிக்கப்படும் எனவும், அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது உறவினரது வீட்டிற்குள் நுழைய முயன்றதை அடுத்து, ஆதரவற்ற மக்களின் முகாமிலுள்ள நபரின் மீது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் தனது குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அவர் இந்த தாக்குதலை நடத்தியாதாகக் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட அவரது காதலி கய்லீ ஆவு யங் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான விசாரணை இன்னும் துவங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.