ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் ஆசிரியா் வேலைவாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் காரைமேடு அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய 2 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடம், மாதானம் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம், கணக்கு மற்றும் இயற்பியல் ஆகிய 3 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடம், கொண்டல் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் 1 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடம் ஆகிய மூன்று பள்ளிகளில் காலியாக உள்ள 6 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியா்கள் நிரப்பப்பட உள்ளனா். தொகுப்பூதியத்தில் பணி வாய்ப்பு பெற ஜூன் 24 முதல் ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான, விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் 2-வது தளத்தில் இயங்கிவரும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளாா்.